கொல்லைப்புற வழியாக இடஒதுக்கீடு பெற ஆதிக்க சக்திகள் முயற்சி: ராமதாஸ்
சென்னை: தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தம்மால் நிறுவப்பட்ட தமிழக மாணவர் சங்கமும் இணைந்து போராடும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வழக்கும் சதியும்
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறை படுத்தப்படுவது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும், இதை ரத்து செய்யவேண்டும் என்றும் கோரி மாணவிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலோட்டமாக பார்க்கும்போது இது இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு போல தோன்றினாலும், இதன் பின்னணியில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரான இன்னொரு சதியும் உள்ளது.
கொல்லைப்புற வழியாக இடஒதுக்கீடு
69 சதவீத இடஒதுக்கீட்டால் கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் தங்களுக்கான வாய்ப்பு பறிபோய்விட்டதாக கூறாத இந்த சக்திகள் மருத்துவ கல்லூரிகளில் மட்டும் தங்கள் வாய்ப்பு பறிபோனதாக வழக்கு தொடர்ந்துள்ளதில் இருந்து அவர்களின் உண்மை நோக்கம் தெரிகிறது. கொல்லைப்புற வழியாக இடஒதுக்கீடு பெறுவதற்கான ஆதிக்க சக்திகளின் கோரிக்கை நிறைவேற அனுமதிக்கக்கூடாது.
தமிழக மாணவர் சங்கம் போராடும்
சமூக நீதிக்கு எதிரான இந்த முயற்சியை முறியடிக்க அரசியல் சட்டம் மற்றும் இடஒதுக்கீட்டு வழக்குகளில் வல்லமை பெற்ற வக்கீல்களை அமர்த்தி, வழக்கை தமிழக அரசு எதிர்கொள்ள வேண்டும். என்னால் நிறுவப்பட்ட தமிழக மாணவர் சங்கமும் இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டு சதியை முறியடிக்க முயற்சிகளை மேற்கொள்ளும் என்று அதில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications