16ம் தேதி தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கானோர் கூடி பிரமாண்ட போராட்டம் நடத்த முடிவு
தூத்துக்குடி: கூடங்குளம் போராட்டத்தின் அடுத்தகட்டமாக தூத்துக்குடியில் 16ம் தேதி ஆயிரக்கணக்கானோரைக் கூட்டி பெரும் போராட்டம் நடத்த அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் தீர்மானித்துள்ளனர். இதில் மீனவர்கள், கிராம மக்கள் என பல தரப்பட்டவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து கடுமையான போராட்டங்களில் கிராம மக்கள் குதித்துள்ளனர். இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து பதட்ட நிலை காணப்படுகிறது. கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே நடந்த முற்றுகைப் போராட்டத்தை போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் கலைத்த விதம் கிராம மக்களிடையே பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர் கொல்லப்பட்டதும், சிறுமி ஒருத்தி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானதும் அப்பகுதி மீனவ மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி பனிமலை மாதா ஆலயம் முன்பு செப்டம்பர் 16ம் தேதி பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்த போராட்டக் குழுவினர் தீர்மானித்துள்ளனர். இதில் மீனவர்கள், கிராமத்தினர் என சகல தரப்புகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications