மக்கள் விருப்பத்தை ஏற்று உதயகுமார் சரண் அடையமாட்டார்: போராட்டக்குழு அறிவிப்பு
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடும் வரை போராட்டம் தொடரும் என்றும், பொதுமக்கள் விரும்பாததால் உதயகுமார் சரண் அடையமாட்டார் என்றும் போராட்டக்குழுவைச் சேர்ந்த மைபா ஜேசுராஜ் தெரிவித்தார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தின் ஒரு கட்டமாக நேற்று இடிந்தகரை கடலில் ஜல சத்தியாகிரக போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு பின்னர் ஜேசுராஜ் கூறுகையில்,
போராட்டம் என்ற பெயரில் நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. அறவழியில்தான் உதயகுமார் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறார். ஆனால் எங்கள் பகுதி மக்களின் உணர்வுகளை மதிக்காமல் காவல்துறை தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. உதயகுமார் சரண் அடைவதை இங்குள்ள மக்கள் ஏற்கவில்லை. எனவே அவர்கள் விருப்பப்படி உதயகுமார் சரண் அடையமாட்டார்.
இடிந்தகரையில் அணு மின் நிலையத்துக்கு எதிராக நடக்கும் போராட்டத்தை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. மக்கள் தங்கள் உயிரை பணயம் வைத்துதான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள மக்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால் தமிழக அரசுதான் பொறுப்பு. மேலும் உதயகுமார் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அவரது வீ்ட்டில் போலீசார் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். எங்கள் போராட்டத்தை நசுக்குவதற்காக உதயகுமார் மீது பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். நாங்கள் இதனை சந்திக்கத் தயாராக இருக்கிறோம். எனவே மக்கள் உணர்வுக்கு மத்திய, மாநில அரசுகள் மதிப்பளிக்க வேண்டும். கூடங்குளம் அணு உலையை மூடும் வரை எங்கள் அறப்போராட்டம் தொடரும் என்றார்.












Click it and Unblock the Notifications