சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் முதலீட்டுக்கு எதிர்ப்பு- செப். 20ல் கடையடைபு போராட்டம்
சென்னை: சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் முதலீடு செய்ய எதிர்புத் தெரிவித்து வரும் 20-ந் தேதி கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிபட அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். முதல்வரைப் போல தங்கள் மாநிலங்களிலும் அன்னிய நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜிக்கும் உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ்யாதவ்வுக்கும் எமது பேரவை நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
அன்னியர்களின் பேராசைக்கு மத்திய அரசு வழிவிட்டிருக்கும் நிலையில், அன்னியர்களை அனுமதிக்க மாட்டோம் என்ற தமிழகம், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநில முதல்வர்களின் முடிவு சரித்திரம் முக்கியத்துவம் மிக்கது. தங்கள் உயிரையும் கொடுத்து நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த நமது முன்னோர்களின் தியாகத்தை மதிப்பதாக அமைந்துள்ளது. 130 கோடி மக்களும் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
அதே நேரத்தில் சில்லரை வணிகத்தில் மட்டுமின்றி மொத்த வணிகத்திலும் அன்னிய நிறுவனங்ளை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக முதல்வரை வேண்டிக் கொள்கிறோம். வணிகத்துறை நாட்டு பொருளாதாரத்துடன் மட்டுமின்றி சுதந்திரத்துடனும் சம்மந்தப்பட்டது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 20-ந்தேதி தமிழகம் முழுவதும் முழுஅடைப்பு நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications