போபர்ஸை மாதிரி நிலக்கரி ஊழலையும் மறந்துவிடுவாங்க: உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே
புனே: கடந்த காலங்களில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை அதிகம் பேசினார்கள்..ஆனால் மக்கள் அதை மறந்துவிட்டனர்.. அதைப் போல நிலக்கரி சுரங்க ஒதுக்கீடூ ஊழலையும் மக்கள் விரைவில் மறந்துவிடுவர் என்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் சிண்டே கூறியுள்ளார்.
புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் சுஷில்குமார் ஷிண்டே கூறியதாவது:
போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் முன்பு பெரிய விவகாரமாக பேசப்பட்டு வந்தது. ஆனால் மக்கள் அதனை மறந்துவிட்டனர். இப்போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலைப் பற்றி பேசுகின்றனர். இதுவும் விரைவில் மறக்கப்பட்டுவிடும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் வலுவானதாகவே உள்ளது. சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் எக்களை ஆதரிக்கிறார். தற்போதைய சர்வதேச பொருளாதர சூழலில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி போன்ற சீர்திருத்தங்கள் மிகவும் அவசியமானவை. வேறு வழியே கிடையாது.
நாடாளுமன்றத்துக்கு நிச்சயம் இடைத்தேர்தல் வராது. தற்போது நிலக்கரி சுரங்க ஊழலைப் பற்றிப் பேசும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள், அவர்களது ஆட்சிக் காலத்தில் நடந்த பெட்ரோல் பம்ப் ஊழலை மறந்துவிட்டனரா? என்றார்.
சுஷில்குமார் ஷிண்டேயின் இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications