ஆருஷி கொலை வழக்கு: தாய் நுபுருக்கு ஜாமீன், 25ல் தான் விடுதலை

கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி நொய்டாவில் பல் மருத்துவர்களான ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வாரின் 14 வயது மகள் ஆருஷி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் இறந்த மறுநாள் அவர்கள் வீட்டில் வேலை செய்த ஹேம்ராஜின் உடல் அதே வீட்டு மாடியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு காசியாபாத் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகளாக ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ராஜேஷ் தல்வார் ஜாமீனில் வெளியே உள்ளார். நுபுர் தல்வார் கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி கைது செய்யப்பட்டு காசியாபாத்தில் உள்ள தஸ்னா சிறையில் அடைக்கப்பட்டார்.
தல்வார்கள் சாமர்த்தியமாக கொலையை செய்துவிட்டு சாட்சியங்களை அழித்துவிட்டதாக அவர்கள் மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக சிறையில் இருந்த நுபுர் தல்வார் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டது.
ஆனால் சிபிஐ இன்னும் 2 சாட்சியங்களை விசாரிக்கவிருப்பதால் நுபுர் வரும் 25ம் தேதி வரை சிறையில் தான் இருப்பார். சாட்சியங்களை விசாரித்த பிறகே நுபுர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார். இடையே வெளியேவி்ட்டால் அவர் சாட்சியங்களை கலைத்துவிடுவார் என்று சிபிஐ கருதுகிறது.












Click it and Unblock the Notifications