முற்றுகைப் போராட்டம்: அமெரிக்க தூதரகத்துக்கு 2 நாள் திடீர் விடுமுறை அறிவிப்பு
சென்னை: நபிகள் நாயகம் பற்றிய திரைப்பட சர்ச்சையால் தொடர் முற்றுகைப் போராட்டங்களை எதிர்கொண்டிருக்கிறது சென்னை அமெரிக்க தூதரகம். இன்றும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படக் கூடும் என்பதால் அமெரிக்க தூதரகத்துக்கு 2 நாள் திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் குறித்து அமெரிக்கர் ஒருவர் எடுத்த சர்ச்சைக்குரிய திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. இதில் சென்னையும் விதிவிலக்கு அல்ல. சென்னை அமெரிக்க தூதரகம் மீது 3 நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் தடையையும் மீறி 2-வது நாளாக நேற்றும் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர். அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகே இருந்து அமெரிக்க தூதரகத்தை நோக்கி முன்னேற முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனிடையே திடீரென அமெரிக்க தூதரகத்துக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விசா நேர்காணலுக்கு வந்தவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். விசாவுக்கு விண்ணப்பித்தோர் தங்களுக்கான நேர்காணல் தேதியை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே அமெரிக்காவைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் இந்திய தேசிய லீக் கட்சியினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications