பாரத் பந்த்: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது!

டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியும், வீட்டு உபயோகத்திற்கு ஆண்டிற்கு 6 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன,
மேலும் நாட்டின் முக்கிய எதிர்கட்சியான பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நாளை நாடு தழுவிய பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்தன. இதற்கு தமிழகத்தை சேர்ந்த திமுக. பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. மேலும் வணிக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆகியவை பந்த்திற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தன.
இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் நாடு தழுவிய முழு அடைப்பு நடைபெற்றது. மாலையில் முடிவடைந்தது. இதில், எதிர்க்கட்சிகள் ஆளும் உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிஷா ஆகிய மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
டெல்லி
காங்கிரஸ் ஆட்சியின் கீழ் உள்ள தலைநகர் டெல்லியில் பெரும்பாலான கடைகள் இன்று மூடப்பட்டிருந்தன. குறிப்பாக கான் மார்க்கெட், கன்னாட் ப்ளேஸ், கிரேட்டர் கைலாஷ், கரோல் பாக், சாந்தினி செளக் மற்றும் காஷ்மீர் கேட் ஆகிய இடங்களில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. டெல்லி ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்ற மறுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர். டெல்லியில் தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. விகாஷ் மார்க் பகுதியில் பாஜகவினர் மறியல் போராட்டம் நடத்தினர். தலைநகர் டெல்லியில் மற்றும் 100 இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ரயில் மறியல் போராட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டத்தால் மதுரா, ஆக்ரா, வாரணாசி, அலககாபாத் மற்றும் லக்னோவுக்கான ரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆக்ரா- குவாலியர் நெடுஞ்சாலையில் வர்த்தகர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவின் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. லக்னோவின் சுல்தான்பூரில் உள்ள வால்மார்ட் அங்காடிக்கு எதிராக சமாஜ்வாதி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
கர்நாடக மாநிலத்திலும் முற்றிலும் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிப்புக்குள்ளானது. பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் முழுவதுமாக ஓடவில்லை.
வினாயகர் சதுர்த்தி பண்டிகை என்பதால் சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா ஆகியவை முழு அடைப்பில் பங்கேற்கவில்லை. பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் பாஜகவின் ரவிசங்கர் பிரசாத் மற்றும் சிபி தாக்கூர் ஆகியோர் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டதால் பெரும்பாலான கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. ஆனால் ஆட்டோக்கள் முழுவதும் இயக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் பாதியளவு பேருந்துகளே இயக்கப்பட்டன. தமிழகத்தில் லாரிகள் முழுவதும் இயக்கப்படவில்லை. தொழில்நகரமான திருப்பூரில் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளாவில் முழு அளவிலான பந்த் நடந்தது.












Click it and Unblock the Notifications