சென்னை அண்ணா சாலையில் மறியல் செய்த இல.கணேசன் கைது
சென்னை: பாரத் பந்த்தையொட்டி சென்னை அண்ணா சாலையில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பாஜக உள்ளிட்ட கட்சிகள் இன்று அழைப்பு விடுத்த பாரத் பந்த் நாடு முழுவதும் நடந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த பந்த் முழு வெற்றி பெற்றது.
இந்த நிலையில் சென்னையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் அண்ணா சாலையில் திரண்டு சாலை மறியல் செய்ய முயன்றனர். ஆனால் அவர்களைப் போலீஸார் அனுமதிக்கவில்லை. அனைவரையும் தடுத்து நிறுத்திக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
கிண்டியில்
இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கிண்டியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். மின்சார ரயிலை மறித்து போராட்டம் நடத்திய அவர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
மயிலாடுதுறையில் ரயில் மறியல்
இதேபோல மயிலாடுதுறையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
கும்பகோணம், மயிலாடுதுறை பகுதிகளில் கடைகள் திறந்திருந்தன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் ஓடின.
தர்மபுரி -கிருஷ்ணகிரி ஸ்தம்பிப்பு
கிருஷ்ணகிரியில் முழு கடை அடைப்பு நடந்தது. கர்நாடக எல்லை பகுதியான ஓசூரில் முழு கடை அமைப்பு நடந்ததுது. பெங்களூர் மற்றும் கர்நாடகத்திற்குப் பேருந்துப் போக்குவரத்து நடைபெறவில்லை.












Click it and Unblock the Notifications