தமிழகத்தில் பள்ளிகள் வழக்கம் போல இயங்கின-அரசின் குழப்ப அறிவிப்பால் பலர் 'ஆப்சென்ட்'!
சென்னை: பாரத் பந்த் தினத்தன்று பள்ளிகள் மூடப்படும் என்று முதலில் அறிவித்த தமிழக அரசு பின்னர், விடுமுறையை ரத்து செய்து வழக்கம் போல செயல்படும் என்று குழப்பியதால் பல தனியார் பள்ளிகளில் மாணவர் வருகை குறைவாக காணப்பட்டது. இதேபோல அரசுப் பள்ளிகளிலும் குறைந்த மாணவர் வருகை காணப்பட்டது.
பாரத் பந்த்துக்கு ஆளும் கட்சியான அதிமுக ஆதரவு தெரிவிக்கவும் இல்லை, எதிர்ப்பு தெரிவிக்கவும் இல்லை. இந்த நிலையில் பாரத் பந்த் தினத்தன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறையிலிருந்து முதலில் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து அனைத்துப் பள்ளிகளிலும் செப்டம்பர் 20ம் தேதி விடுமுறை என்று நோட்டீஸ் போர்டில் எழுதிப் போட்டனர், எஸ்.எம்.எஸ்.மூலமும் பெற்றோர்களுக்குத் தெரிவித்தனர்.
ஆனால் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் பந்த்துக்கு திமுக ஆதரவு தெரிவிக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து அரசின் அறிவிப்பில் மாற்றம் ஏற்பட்டது. பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்று இரவில் அறிவிப்பு வெளியானது.
இதனால் பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பெரும் குழப்பமடைந்தனர். பள்ளிகள் இருக்கிறதா, இல்லையா என்று பலரும் குழம்பிப் போய் விட்டனர்.
பல தனியார் பள்ளிகள், வழக்கம் போல 20ம் தேதி பள்ளிக்கூடங்கள் செயல்படும் என்பதை எஸ்எம்எஸ் மூலம் அவசரம் அவசரமாக பெற்றோர்களுக்குத் தெரிவித்தனர். ஆனால் பலருக்கு எஸ்எம்எஸ் போய்ச் சேரவில்லை. இதனால் இன்று பள்ளிகள் திறந்தபோது பல பள்ளிகளில் மாணவர் வருகை வழக்கத்தை விட குறைவாக காணப்பட்டது.
இதே நிலைதான் பல அரசுப் பள்ளிகளிலும் தொலை தூரத்திலிருந்து வர வேண்டிய ஆசிரியர்கள் கூட பலர் இன்று பள்ளிக்கு வரவில்லை என்று தகவல்கள் தெரிவித்தன. பல மாணவர்களும் கூட இன்று பள்ளிக்கு வரவில்லை. இருப்பினும் மாணவர் வருகையில் மிகப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.












Click it and Unblock the Notifications