ஒரு வழியாக பாஜகவுக்கு 'குட்பை' சொல்கிறார் எதியூரப்பா?

பெங்களூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் எதியூரப்பா. அப்போது அவர் பேசுகையில், பாஜகவில் தற்போது நான் மூச்சுத் திணறும் சூழலில் உள்ளேன். எனவே எனது எதிர்காலத்தை முடிவு செய்யும் தருணத்திற்காக காத்திருக்கிறேன். நான் தற்போது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தில் உள்ளேன். எனது 2வது கட்டப் பயணம் டிசம்பர் மாத இறுதியில் முடிவடைகிறது. அதன் பிறகு எனது முடிவை அறிவிப்பேன்.
டிசம்பர் மாதத்தில் எனது அரசியல் எதிர்கால முடிவை எடுத்து அறிவிப்பேன். எனது அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்து அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது உண்மையே. இருப்பினும் இதை நான் தாமதம் என்று சொல்ல மாட்டேன். இப்போது நான் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அது ஜெகதீஷ் ஷெட்டார் தலைமையிலான பாஜக அரசைப் பாதிக்கும் என்பதால்தான் பொறுமை காக்கிறேன்.
கட்சியிலோ அல்லது ஆட்சியிலோ எந்தப் பதவிக்கும் நான் ஆசைப்பவில்லை. கர்நாடக மாநில பாஜக தலைவர் பதவிக்கும் நான் ஆசைப்படவில்லை. எனக்காக கட்சி மேலிடத்திடம் லாபி செய்ய வேண்டாம் என்றுதான் எனது ஆதரவாளர்களிமும் கூறியுள்ளேன். கட்சித் தலைவர் பதவியை நான் ஏற்கவும் மாட்டேன். கட்சியே வந்து அதைக் கொடுத்தாலும் ஏற்க மாட்டேன்.
நான் மீண்டும் கர்நாடக முதல்வர் பதவிக்கு வருவதாக இருந்தால் மக்களின் ஆசியுடன்தான் வருவேன்.
உண்மையில் நான் முதல்வர் பதவியிலிருந்து விலகியதுமே ஆளுங்கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமல்லாமல் எதிர்க்கட்சி உறுப்பினராகவும் கூட செயல்பட்டு வருகிறேன். எனது கடுமையான நிலை காரணமாகத்தான் விவசாயிகளுக்கான ரூ. 3200 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது. எனது அழைப்பின் பேரில்தான் கேஎஸ்ஆர்டிசி ஊழியர்களின் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது. எனது முயற்சியால்தான் பெங்களூரில் குப்பைகள் தேங்கிய பிரச்சினைக்கு முடிவு வந்தது.
வரும் நாட்களில் நான் 50 சட்டசபைத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன்.
கடந்த 40 ஆண்டுகளில் பாஜகவை இங்கு நான் கட்டி எழுப்பியுள்ளேன். அதை கட்சி மேலிடம் நினைத்துப் பார்க்க வேண்டும். வெறும் 2 எம்.எல்.ஏக்கள் என்று இருந்த பாஜக இன்று 121 எம்.எல்.ஏக்களுடன் இருப்பதற்கு யார் காரணம் என்பதை அவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். தென்னிந்தியாவின் முதல் பாஜக ஆட்சி கர்நாடகத்தில் அமைய யார் காரணம் என்பதை அவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
துணை முதல்வர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது முழு சக்தியையும் கட்சியைப் பலப்படுத்துவதில் செலவழிக்க வேண்டும். பாஜகவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வரக் கூடிய சக்தி அவரிடம் உள்ளது. அதை அவர் உணர வேண்டும்.
காவிரிப் பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங், தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று தண்ணீரைத் திறந்து விடச் சொன்னது தவறான நடவடிக்கையாகும். மைனாரிட்டி ஆகி விட்ட தனது ஆட்சியைக் காப்பாற்ற அதிமுகவின் தயவை அவர் நாடியுள்ளார். இதனால்தான் தண்ணீர் திறந்து விடக் கூறியுள்ளார் என்றார் எதியூரப்பா.
ரெட்டி சகோதரர்களால் பெரும் பிரச்சினையில் சிக்கிய எதியூரப்பா தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதனால் அவருக்கு பெரும் நெருக்கடி எழுந்தது. சட்டசபையில் 3 முறை தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார். இறுதியில் கடந்த ஜூலை மாதம் தனது பதவியை விட்டு ராஜினாமா செய்தார். பின்னர் சுரங்க ஊழலில் சிக்கி கைதாகி ஜாமீனில் விடுதலையானார்.
அதன் பின்னர் கர்நாடகாவில் 2 முறை முதல்வர்கள் மாறி விட்டனர். இருமுறையும் எதியூரப்பாவின் நெருக்குதலே முதல்வர்கள் மாற்றத்திற்குக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கட்சியை விட்டு வெளியேறும் மன நிலைக்கு அவர் வந்து விட்டதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications