தர்மபுரியின் வேடந்தாங்கல் ராமக்காள் ஏரி

தர்மபுரி அருகே உள்ளது ராமக்காள் ஏரி. அங்கு தற்போது ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் முகாமிட்டுள்ளன. மஞ்சள் மூக்கு நாரை, சின்னக் கொக்கு, சிறிய பச்சி கொக்கு, கறுப்பு மூக்கு நாரை, செங்கால் நாரை, நத்தைக்கூடை நாரை, நீர்க் கோழி உள்ளிட்ட பறவைகள் ஏரியில் காணப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீள வால் இலைக் கோழி பறவைகள் வந்துள்ளன.
ராமக்காள் ஏரி தவிர்த்து அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளிலும் நீள வால் இலைக் கோழிகள் முகாமிட்டுள்ளன. இந்த பறவைகள் இந்தியாவில் கேரளாவிலும், அஸ்ஸாமிலும், அண்டை நாடான இலங்கை, மியான்மர், தென் சீனா மற்றும் மலேசியாவிலும் அதிக அளவில் காணப்படுகின்றன.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் காணப்படுகின்றன. தர்மபுரி மாவட்டத்தின் வேடந்தாங்கலாக இருக்கும் ராமக்காள் ஏரிக்கு பல்வேறு வகை பறவைகளும் வந்துபோக ஏற்ற சூழலை மாவட்ட நிர்வாகம் உருவாக்கித் தர வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கான்கிரீட் காடாக நகரங்கள் மாறி வரும் வேளையில் இதுபோன்று ஏரிகளில் பறவைகள் வந்து முகாமிடுவதைக் காண கண் கோடி வேண்டும்.












Click it and Unblock the Notifications