'தி இந்து' நாளிதழ் முன்னாள் ஆசிரியர் ஜி.கஸ்தூரி மரணம்!

தி இந்து நாளிதழின் இன்றைய வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்தவர் ஜி கஸ்தூரி. அவர் காலத்தில்தான் இந்து கறுப்பு வெள்ளையிலிருந்து வண்ணத்துக்கு மாறியது. அச்சகத்தில் பல புதுமைகள் புகுத்தப்பட்டன.
வாரப் பத்திரிகையாக 1878-ல் தொடங்கப்பட்டது தி இந்து. சட்டக்கல்லூரி மாணவர்கள் நால்வருடன், ஜி சுப்பிரமணிய அய்யர் என்பவர்தான் இந்த நாளிதழையும் சுதேசமித்திரனையும் ஸ்தாபித்தார். முதல் பதிப்பு 80 பிரதிகள் விற்பனையானது.
பின்னர் 1898-ல் மூடும் நிலைக்குப் போய்விட்ட அந்தப் பத்திரிகையை வாங்கி நடத்தியவர்தான் கஸ்தூரிரங்க அய்யங்கார்.
கஸ்தூரிரங்க அய்யங்காரின் இரண்டாவது மகன் கஸ்தூரி கோபாலன். இவரது மகன்தான் ஜி கஸ்தூரி. 1924-ல் பிறந்த கஸ்தூரி, சென்னையில் பள்ளிப் படிப்பு, சென்னை பல்கலைக் கழகத்தில் எம்ஏ முடித்ததும் இந்து நாளிதழில் இணைந்தார். 1944 முதல் 1955 வரை பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர், 1955-ல் இணை ஆசிரியரானார்.
1965-ம் ஆண்டு அந்தப் பத்திரிகையின் ஆசிரியரானார். 1991-ம் ஆண்டு வரை, 25 ஆண்டுகள் ஆசிரியராகத் தொடர்ந்தார். 134 ஆண்டுகால பாரம்பரியமிக்க இந்து நாளிதழில் இத்தனை ஆண்டுகள் ஆசிரியர் பதவியை வகித்தவர் கஸ்தூரிதான்.
இவர் காலத்தில்தான் இந்து நாளிதழ் பல்வேறு வளர்ச்சியை எட்டியது. அச்சுத் துறையில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியது.
பிடிஐ நிறுவனத்துடன் நீண்ட கால தொடர்பிலிருந்தவர் கஸ்தூரி. அதன் இயக்குநராக நீண்ட காலம் பதவி வகித்தார்.
இன்று அதிகாலை 2 மணிக்கு அவர் சென்னை கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள தனது இல்லத்தில் மரணமடைந்தார்.
இணையதள ஊடகத்துக்கு முக்கியத்துவம் தந்தவர்!
அவரது மரணம் குறித்து இந்துவின் முன்னாள் முதன்மை ஆசிரியரும், இன்றைய இயக்குநருமான என் ராம் கூறுகையில், "சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்திய பத்திரிகைத் துறையில் ஜி கஸ்தூரியின் பங்களிப்பு மகத்தானது.
கஸ்தூரி காலத்தில்தான் அச்சு ஊடகத் துறையில் பல புதுமைகளை முதலில் அறிமுகப்படுத்தியது தி இந்து. இணைய தள பத்திரிகைகளை ஊக்குவித்தவர் கஸ்தூரி. ஊடகத்துறையின் எதிர்காலம் இணையதளங்களும், டிஜிட்டல் மீடியாக்களும் என்பதை அவர் வலியுறுத்தி வந்தார்.
கடைசி காலம் வரை தனது ஐமேக் கம்ப்யூட்டரில் உலகின் அத்தனை சிறந்த பத்திரிகை வடிவமைப்புகளையும் பார்த்து குறிப்புகள் தருவார்.
நேற்று இந்துவின் 134வது ஆண்டு விழாவில் பங்கேற்றார். அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவர் உயிர் பிரிந்துவிட்டது," என்றார்.
தனது மனைவி கமலா, மகன்கள் கே பாலாஜி, கே வேணுகோபால், மகள் லக்ஷ்மி ஸ்ரீநாத் (அனைவருமே தி இந்து இயக்குநர்கள்) ஆகியோருடன் வசித்துவந்தார் ஜி கஸ்தூரி.












Click it and Unblock the Notifications