தமிழகத்துக்கு தண்ணீர் விட எதிர்ப்பு: அக்டோபர் 6ம் தேதி 'கர்நாடக பந்த்'

சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் தமிழகத்தில் 15 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல் பயிரை காப்பாற்ற குறைந்தபட்சமாக கர்நாடகத்திலிருந்து 24 நாட்களுக்கு தினமும் 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று (மொத்தம் 48 டி.எம்.சி.) முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.
ஆனால், இதை கர்நாடகம் ஏற்கவில்லை. கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை என்றும், மாநிலத்தில் தொடர்ந்து வறட்சி நிலவி வருவதாகவும், பெங்களூரு நகரத்தில் குடிநீருக்கே காவிரி நீரை வினியோகிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறிய கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார், தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட கொடுக்க முடியாது என்றார்.
இதையடுத்து ஆணையத்தின் தலைவரான பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு குறைந்தபட்சம் செப்டம்பர் 20ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 9,000 கன அடி வீதம் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடும்படி கூறினார்.
ஆனால், இந்த உத்தரவை ஏற்க மறுத்த ஜெகதீஷ் ஷெட்டார், ஆணைய கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் எந்தவித உடன்பாடும் ஏற்படாமல், கூட்டம் பெரும் தோல்வியில் முடிந்தது.
ஆணையத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே சுமூகமான முடிவு ஏற்படாவிட்டால், ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் பிரதமர் சொல்லும் தீர்ப்பை எந்த மாநிலமாக இருந்தாலும் ஏற்க வேண்டும் என்பது விதியாகும்.
இந் நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் விடுமாறு பிரதமர் கூறியதை எதிர்த்து கர்நாடகம் முழுவதும் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாண்டியா, மைசூர் மாவட்டங்களில் பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படங்களை எரித்தும், செருப்பால் அடித்தும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின.
சில இடங்களில் பிரதமருக்கும் தமிழக முதல்வருக்கும் திதி நடத்துவதாகக் கூறிக் கொண்டு, மொட்டையடித்துக் கொண்டு, இறுதிக் காரிய பூஜைகள் என்ற பெயரில் மனதை நோகடிக்கும் சம்பவங்களும் நடந்தன. இவையெல்லாமே கன்னட டிவி சேனல்களில் காட்டப்பட்டன.
மாண்டியா மாவட்டத்தில் இந்தப் போராட்டங்களுக்கு வெளிநாடுகளில் வாழும் கன்னடர்களின் ஆதரவும் கிடைத்தது. இந்தப் போராட்டங்களில் வெளிநாடுகளில் வாழும் கன்னடர்களும் பங்கேற்றனர்.
இதற்கிடையே கர்நாடகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரும் வெளியுறவு அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து காவிரி விவகாரம் குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.
இந் நிலையில் தமிழகத்துக்கு எதிராக வரும் அக்டோபர் 6ம் தேதி, சனிக்கிழமை கர்நாடக பந்த் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. கன்னட ரக்ஷன வேதிகே, கன்னட சளுவளி உள்ளிட்ட இந்த அமைப்புகள் நடத்தும் போராட்டத்துக்கு கர்நாடக அரசின் மறைமுக ஆதரவும் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதனால், அன்றைய தினம் பெரும் பதற்றம் நிலவலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இந் நிலையில், காவிரி பிரச்சனை தொடர்பான பிரதமரின் உத்தரவு, அடுத்த கட்டமாக சட்டரீதியாக எப்படி போராடுவது என்பது குறித்து விவாதிப்பதற்காக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் பெங்களூரில் நடந்தது.
இதில், துணை முதல்வர்கள் ஈசுவரப்பா, அசோக், சட்டசபை எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் சித்தராமையா, சட்டசபை மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் எச்.டி.ரேவண்ணா, மேலவை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஆர்.பட்டீல், அமைச்சர்கள் சுரேஷ்குமார், பசவராஜ் பொம்மை, உமேஷ் கத்தி, சோமண்ணா, தலைமைச் செயலாளர் ரங்கநாத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்துக்குப் பின் ஜெகதீஷ் ஷெட்டர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கர்நாடகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் 49 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது வளர்ந்து நிற்கும் பயிர்களை பாதுகாப்பது, பெங்களூர் உள்பட பல்வேறு நகரங்களின் குடிநீர் தேவைகளை சமாளிப்பது ஆகியவற்றுக்கு 30 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும்.
தமிழ்நாட்டுக்கு 9,000 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற பிரதமரின் உத்தரவு சரியல்ல. எனவே அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி மனு செய்தோம். இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திலும் நேரில் மறு ஆய்வு மனு கொடுத்து உள்ளோம். மேலும் உண்மை நிலையை கண்டறிய நிபுணர் குழுவை அனுப்பி வைக்க வேண்டும். அதுவரை பிரதமரின் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி உள்ளோம் என்றார்.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா கூறுகையில், இந்த விவகாரத்தில் மாநில அரசாங்கம் தெளிவான முடிவை எடுத்து உள்ளது. அதை முழுமையாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் முதல் பெய்ய தொடங்கும். அந்த மழை டிசம்பர் வரை நீடிக்கும். தமிழகத்தில் இப்போது உடனடியாக பாசனத்துக்கு தண்ணீர் தேவை இல்லை. மேட்டூர் அணையில் 47 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகம் திறந்து விடப்பட்ட தண்ணீரை அவர்கள் பாசனத்துக்கு திறந்து விடவில்லை. அணையில் தேக்கி தான் வைத்து உள்ளனர். தண்ணீரை தேக்கி வைக்கவே அவர்கள் கேட்கிறார்கள்.
நமது விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று நடத்தவில்லை. தங்களுக்கு பிரச்சனை இருப்பதாலேயே போராட்டம் நடத்துகிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications