ரூ.300 கட்டணத்தில் நவதிருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பஸ்கள்: அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு
நெல்லை: புரட்டாசி சனிக்கிழமையை ஓட்டி நவதிருப்பதி கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று முதல் வரும் 4 சனிக்கிழமைகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகும். இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நவதிருப்பதி கோயில்களை பக்தர்கள் தரிசிக்க வசதியாக இன்று 22ம் தேதி துவங்கி, வரும் 29ம் தேதி, அக்டோபர் 6, 13 ஆகிய நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நெல்லை புதிய பஸ் நிலையத்திலிருந்து இன்று முதல் அடுத்த 4 சனிக்கிழமைகளிலும் காலை 7 மணிக்கு நவதிருப்பதி கோயில்களுக்கான சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்லும்.
நவதிருப்பதி தலங்களாக ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருபுளியங்குடி, பெருங்குளம், இரட்டை திருப்பதி, தென்திருப்போரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி, மற்றும் புன்னையடி வனத்திருப்பதி கோயில், கருங்குளம், நாங்குநேரி, திருகுருங்குடி சென்று இரவு நெல்லை புதிய பஸ் நிலையம் வந்து சேரும் வகையில் இவை இயக்கப்படுகின்றன. கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டண தொகையை செலுத்தி பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications