சி.பி.ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக ரயில்வே அமைச்சர் பதவி

19 எம்.பிக்களை மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமையன்று மத்திய அரசிலிருந்து வெளியேறியது. அந்தக் கட்சியின் 6 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.இவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளன.
இதையடுத்து மத்திய அமைச்சரவையை மாற்றியாக வேண்டிய நிர்பந்தத்தில் மத்திய அரசு உள்ளது. மத்திய அமைச்சரவை மாற்றத்துக்கு முன்பாக கூட்டணிக் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்த உள்ளது. இதனிடையே குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மன்மோகன்சிங் நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்துப் பேசினார்.
மத்திய அரசு மேற்கொண்ட டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு, அன்னிய முதலீட்டுக்கு அனுமதி ஆகியவை தொடர்பாகவும் தற்போது நாடு எதிர்கொண்டிருக்கும் நிலைமைகள் குறித்தும் அமைச்சரவை மாற்றம் குறித்தும் இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரான சி.பி.ஜோஷிக்கு ரயில்வே துறை அமைச்சகப் பொறுப்பு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸின் முகுல்ராய் வசம் ரயில்வே அமைச்சகம் இருந்தது. ரயில்வே அமைச்சகமானது ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் வசம் இருந்து வந்தது. தற்போதுதான் பல ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் வசம் ரயில்வே துறை அமைச்சகம் சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications