25ம் தேதி மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் கூடங்குளம் போராட்டக்காரர்கள்
நெல்லை: வரும் 25ம் தேதி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளார்.
கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி கடந்த ஓராண்டுக்கும் மேலாக எதிர்ப்புக்குழுவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் கடந்த 12ம் தேதி அன்று அணு உலை முற்றுகை போராட்டம் வலுவடைந்து பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் உருவாகி தடியடி, துப்பாக்கிச்சூடு வரை சென்று அதில் ஒரு மீனவர் பலியானார். இரண்டாம் கட்ட போராட்டமான ஜலசந்தி
போராட்டத்தில் விமானப்படை விமானம் தாழ்வாக பறந்து விரட்டியதில் சகாயராஜ் என்ற மீனவர் பாறையில் தவறி விழுந்து பலியானார்.
இரண்டு உயிர்களை காவு வாங்கிய பின்னரும் எதிர்ப்புக்குழுவினர் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து சென்று வருகிறார்களே தவிர அதில் இருந்து பின் வாங்குவதாக தெரியவில்லை. இதனை தொடர்ந்து கடந்த 22ம் தேதி தூத்துக்குடி துறைமுத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். ஒவ்வொரு போராட்டத்திலும் 5,000 முதல் 10,000 மீனவர்கள் வரை பங்கெடுத்து வருகின்றனர்.
தற்போது வரும் 25ம் தேதி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தினை நடத்த உள்ளனர். அதற்காக நாகர்கோவில், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அணு உலை எதிர்ப்பாளர்களை அக்குழுவினர் ஒருங்கிணைத்து வருகின்றனர். மத்திய அரசு அலுவலகங்கள் இல்லாத பகுதிகளில் கல்லறைகளில் குடியேறும் போராட்டம் நடத்த உள்ளனர்.
வரும் 24-10-2012 அன்று மாலை 4 மணி முதல் 7 மணி வரை லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸ் முன்பும் போராட்டத்தை நடத்திட இப்போதே சமூக வலைத்தளங்கள் மூலம் கூடங்குளம் எதிர்ப்புக் குழு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications