காவிரியில் தண்ணீர் விட மறுத்த கர்நாடகம் மீது வழக்குத் தொடர ஜெ. உத்தரவு

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
19.9.2012 அன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடி நிலைமையை விரிவாக எடுத்துக்கூறி, இடர்ப்பாடு பங்கீட்டு முறையின்படி குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 2 டி.எம்.சி. அடி தண்ணீர் வீதம் 24 நாட்களுக்கு காவேரி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாலும், பிரதமர் வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் வீதம், அதாவது முக்கால் டி.எம்.சி. அடி தண்ணீரினை 20.9.2012 முதல் 15.10.2012 வரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பு தமிழகத்திற்கு ஏற்புடையதாக இல்லை என்றாலும், இதனையும் திறந்துவிட கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்தது. இந்தச் சூழ்நிலையில், காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கினை கர்நாடகம் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் விரிவாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், வீட்டுவசதித் துறை அமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், பொதுப்பணித் துறை செயலாளர், காவேரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில், காவேரியில் தமிழகத்திற்குரிய பங்கினை கர்நாடகம் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்கக் கோரும் மனுவினை உடன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முதல்வ ஜெயலலிதா உத்தரவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications