7% அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் 80 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி 7% அகவிலைப்படி உயர்வு வழங்க, பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 65% அகவிலைப்படி பெற்று வருகிறார்கள். இனிமேல் அவர்கள் 72% அகவிலைப்படி பெறுவார்கள். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் 50 லட்சம் பேரும், ஓய்வு ஊதியம் (பென்ஷன்) பெறுவோர் 30 லட்சம் பேரும் பயன் அடைவர்..
நேற்று அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு கடந்த ஜுலை மாதம் 1-ந் தேதி முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும்.
மின்சார வாரியங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி நிதி
மாநில மின்சார வாரியங்கள் கடனில் தத்தளிப்பதாகவும், அவற்றின் மறுகட்டமைப்புக்கு, சீரமைப்புக்கு ரூ.2 லட்சம் கோடி நிதி உதவி அளிக்க வேண்டும் என்று மின்துறை அமைச்சகம் அமைச்சரவைக்குப் பரிந்துரை செய்து இருந்தது. இதற்கும் அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது,
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டமும், கட்டமைப்பு துறைகளுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டமும் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் என்று சில அறிவிப்புகளை பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்ததால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் அக்கூட்டம் நடைபெறவில்லை












Click it and Unblock the Notifications