ஸ்பெக்ட்ரத்துக்கு மட்டுமே ஏலம்.. மற்ற இயற்கை வளங்களுக்கு அல்ல: சுப்ரீம் கோர்ட் விளக்கம்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டுக்கு மட்டும் ஏலம் முறை பின்பற்றப்பட வேண்டும். மற்ற இயற்கை வளங்களுக்கு ஏலம் முறை பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. .
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் 122 நிறுவனங்களின் உரிமங்களை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்திருந்தது. மேலும் ஏலம் மூலமே ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட நாட்டின் இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை பின்பற்றுவது தொடர்பாக அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மூலம் உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம் கோரியது.
இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது இம்மனுவை நிராகரிக்க வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தரப்பு வாதிட்டது. மத்திய அரசின் சார்பில் ஆஜராகியிருந்த வானாவதியோ, மத்திய அரசு கோரியபடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட பின்னர் வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் மனு மீது இன்று பதிலளித்த நீதிபதிகள், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு மட்டும்தான் ஏலம் முறை பின்பற்றப்பட வேண்டும். மற்ற இயற்கை வளங்களை ஏலம் விடும்போது அரசின் வருவாயை விட மக்களின் நலமே முக்கியமாக இருக்க வேண்டும் என்று கூறினர்.












Click it and Unblock the Notifications