முதல் மனைவியை பராமரிப்பதற்கு 2வது மனைவி ஒரு பிரச்சினையே இல்லை-மும்பை ஹைகோர்ட்
மும்பை: முதல் மனைவியைப் பராமரிப்பதற்கு பொருளாதார பின்னணிதான் முக்கியம். மாறாக, 2வது மனைவி ஒரு பிரச்சினையாக இருக்க முடியாது என்று பாம்பே உயர்நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை அளித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர் 30 வயதான சஜீதா கான். இவரது கணவர் பெயர் அன்வர் கான். இவர் ஒரு வெளிநாட்டு வங்கியில் சாப்ட்வேர் என்ஜீனியராக இருக்கிறார். 2007ம் ஆண்டு இவர்களுக்குத் திருமணம் நடந்தது. இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு தலாக் சொல்லி விவாகரத்து கூறினார் அன்வர் கான்.
இதை எதிர்த்து சஜீதா கான் பந்த்ரா குடும்ப நல கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த குடும்ப நல கோர்ட் 2010ம் ஆண்டு தலாக் சொல்லியதற்கு ஆதாரம் எதுவும் இல்லை, எனவே அது செல்லாது என்று அறிவித்தது.மேலும் சஜீதாவுக்கு அன்வர் கான், மாதந்தோறும் ரூ. 7900 பராமரிப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த நேரத்தில் அன்வர் கான் 2வது திருமணம் செய்திருந்தார். அவருக்கு ஒரு குழந்தையும் பிறந்திருந்தது. இதையடுத்து இந்த பராமரிப்புத் தொகையானது அவரது மாதாந்திர சம்பளமான ரூ. 31,937 என்பதிலிருந்து கணக்கிட்டு அறிவிக்கப்பட்டது. அதாவது அவரது சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியை சஜீதாவுக்கு அன்வர் கொடுக்க வேண்டும். மீதமுள்ள தொகையைக் கொண்டு அவர் தனது 2வது மனைவி மற்றும் குழந்தையைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியது குடும்ப நல கோர்ட்.
இந்த நிலையில், 2011ம் ஆண்டு பாம்பே உயர்நீதிமன்றத்தை அணுகினார் சஜீதா கான். தனக்கு குடும்ப நல கோர்ட் அறிவித்த பராமரிப்புத் தொகை போதாது என்று அவர் கூறியிருந்தார்.
இதை விசாரித்த பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி தல்வி கடந்த ஜூலை மாதம் பிறப்பித்த உத்தரவில், ஒரு மனைவியை விவாகரத்து செய்த பின்னரும் கூட பராமரிக்க வேண்டியது கணவரின் கடமையாகும். எனவே அன்வரின் சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே சஜீதாவுக்கு என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அடிப்படையிலேயே தவறானதாகும். ஒருவருக்கு எத்தனை மனைவிகள் இருந்தாலும் அனைவருமே சம உரிமையும், மதிப்பும் கொண்டவர்களாகவே பார்க்கப்பட வேண்டும். சட்டப்படியும் அப்படித்தான் கருதப்பட வேண்டும்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை அன்வர் கான் தனது இரு மனைவியரையும் ஒரே மாதிரிதான் பராமரிக்க வேண்டும். எனவே அன்வர் கான் தனது முதல் மனைவிக்கு மாதம் ரூ. 18,000 பராமரிப்புத் தொகையாக தர வேண்டும். அதே போல சொத்துக்களிலும் கூட அன்வர் கான் தனது இரு மனைவியருக்கும் சம உரிமை தர வேண்டும்.
ஒரு கணவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு மறுமணம் புரிந்தாலும் கூட முதல் மனைவியைப் பராமரிப்பதற்கு 2வது மனைவி ஒரு பிரச்சினையாகவோ, காரணமாகவோ இருக்க முடியாது. மாறாக பொருளாதார வசதிதான் இதில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆனால் அதை அன்வர்கான் செய்யத் தவறியுள்ளார்.
ஒருவர் 2வது திருமணம் செய்ய முடிவெடுக்கும்போதே, முதல் மனைவியை தன்னால் பராமரிக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும். இதை இஸ்லாம் மதமே கூட தெளிவாக கூறியுள்ளது. ஒருவர் தனது முதல் மனைவியை பொருளாதார ரீதியாக பராமரிக்க முடியும் என்றால் அவர் மறுமணம் புரியலாம் என்று இஸ்லாமில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் மறுமணம் புரிந்தாலும் கூட தனது முந்தைய மனைவியையும் சமமான அந்தஸ்தில் வைத்துத்தான் பராமரிக்க வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது என்று கூறியிருந்தார்.
இதையடுத்து அன்வர் கான் சார்பில் ஒரு அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனது வேலை பறி போய் விட்டதாக அவர் கூறியிரு்தார். ஆனால் சஜீதா தாக்கல் செய்த மனுவில் அன்வர் கான் மாதம் ரூ. 60,000 சம்பளம் வாங்குவதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து அன்வர் கானின் அபிடவிட் நம்புவது போல இல்லை என்று கூறிய நீதிபதி அதை ஏற்க முடியாது என்று அறிவித்தார்.












Click it and Unblock the Notifications