பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அமல்: ஓரிரு நாளில் அறிவிப்பு
சென்னை: பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை விரைவில் அமல்படுத்துவது என்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மின்தடை மற்றும் மின் பற்றாக்குறை, இதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது நிறைவடைய உள்ள மின் உற்பத்தி திட்டங்களை விரைவாக முடிப்பது குறித்தும், புதிய மின் உற்பத்தி திட்டங்களை துவங்குவது குறித்தும், தற்போதுள்ள மின் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்தும் முதல்வர், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தாம்பரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்த ஸ்ருதி என்ற மாணவி பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து இறந்தார். இதையடுத்து இந்த சம்பவத்தை தன்னிச்சை வழக்காக எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட்டது. அதன் உத்தரவுப்படி அரசு புதிய கட்டுப்பாடுகளை வகுத்து அண்மையில் உயர் நீதிமன்றத்தில் சமர்பித்தது.
இந்நிலையில் நேற்றைய கூட்டத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை விரைவில் அமல்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications