திண்டுக்கலில் பூட்டி கிடந்த பெட்டிக்கடை வெடித்து சிதறியதால் பரபரப்பு
தாடிக்கொம்பு: திண்டுக்கலில் பூட்டி கிடந்த பெட்டிக்கடை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் இன்று காலையில் வெடித்து சிதறியது. இதில் பெட்டிக்கடை முழுவதும் சுக்குநூறாக உடைந்து சிதறி தரைமட்டமானது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தை அடுத்த பெருமாள்கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன்(25). இவரது மனைவி கற்பகம். கடந்த 1 வருடமாக மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியில் உள்ள மாமனாரின் வீட்டில் பாண்டியராஜன் வசித்து வருகிறார்.கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை வைத்து, பாண்டியராஜன் நஷ்டம அடைந்தார். இதனால் பெட்டிக்கடையை பூட்டிவிட்டு, தற்போது கல்குவாரியில் லாரி டிரைவாக பணியாற்றி வருகிறார்.
கல்குவாரியில் பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர் போன்ற வெடிப்பொருட்களை திருடிய பாண்டியராஜன், அவற்றை வெளி மார்க்கெட்டில் விற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் பாண்டியராஜனின் பெட்டிக்கடை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு அப்பகுதியினர் வந்து பார்த்த போது, பெட்டிக்கடை முழுவதும் உடைந்து தரைமட்டமாகி இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், ரேகானா மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வெடித்து சிதறிய பெட்டிக்கடை குறித்து விசாரித்தனர். அப்பகுதியில் ஆய்வு நடத்திய போது, வெடிக்காத 8 ஜெலட்டின் குச்சிகள் கிடைத்தது. இதன்மூலம் பெட்டிக்கடைக்குள் ஜெலட்டின் குச்சிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, பாண்டியராஜனை தேடினர். ஆனால் அதற்குள் பாண்டியராஜன் தலைமறைவாகிவிட்டார். அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார், பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பாண்டியராஜனின் மாமனார் சண்முகம் மற்றும் அவரது மனைவி கற்பகம் ஆகியோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சாதாரண பெட்டிக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்து சிதறிய சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications