Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையை உலுக்கிய திடீர் மழை- மூவர் பலி! மரங்கள் வேரோடு பெயர்ந்ததால் போக்குவரத்து கடும் பாதிப்பு!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நகரை திடீரென நேற்று உலுக்கிய பெரும் சூறாவளி மற்றும் மழைக்கு 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கடுமையான சூறாவளிக் காற்றினால் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு விழுந்ததால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழை கொட்டித் தீர்த்ததால் விமானப் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.

மின்னல் பலி கொண்ட சிறுவன்

சென்னை நகரில் நேற்று திடீரென கருமேகம் சூழ்ந்து பெரும் சூறாவளி காற்று வீசியதுடன் கன மழையும் சேர்ந்து கொண்டது. இடியும் மின்னலும் சேர்ந்து சென்னை நகரவாசிகளை அச்சப்பட வைத்தன. இந்த மின்னல் தாக்கியதில் சென்னை மெரினா கடற்கரையில் சுண்டல் விற்றுக் கொண்டிருந்த சிறுவன் விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த அவன் மீரான் என்பவரின் சுண்டல் கடையில் 2 நாளுக்கு முன்பு தான் வேலைக்கு சேர்ந்திருந்தான். சிறுவன் விக்னேஷுக்கு அருகில் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் மின்னல் தாக்கி படுகாயமடைந்தான். அவனைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை

மண்சரிவில் சிக்கியவர் பலி

சென்னையை நடுங்க வைத்த சூறாவளி புயலின் போது வியாசர்பாடி-எருக்கஞ்சேரி இடையே உள்ள கழிவுநீரகற்றும் பழைய குழாயை எடுத்துவிட்டு மாற்றுக்குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதற்காக குழிதோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பெரும் சூறாவளியால் அந்தக் குழியில் மண் சரிவு ஏற்பட்டு குழிக்குள் இருந்த பாபு என்பவரை மூடியது. அவரை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.

சலவை தொழிலாளி பலி

சென்னை அயனாவரத்தை சேர்ந்த கடம்பாடி என்ற சலவை தொழிலாளி கீழ்ப்பாக்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

சென்னை நகரில் நேற்றைய திடீர் சூறாவளி, மழைக்கு மொத்தம் மூன்று பேர் பலியாகி உள்ளனர்.

போக்குவரத்து பாதிப்பு

சென்னையில் சூறாவளி காற்றுடன் நேற்று பலத்த மழை பெய்ததால் 100க்கும் அதிகமான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.

சென்னையை பீதிக்குள்ளாக்கிய சூறாவளிக்கு மரங்கள், மின்கம்பங்கள், செல்போன் டவர்கள், மெட்ரோ ரயில் தடுப்புகள், விளம்பர போடுகள், வீடுகளின் தகர கூரைகள் எதுவும் தப்பவில்லை. குப்பை தொட்டிகள் தூக்கிவீசப்பட்டு வாகன ஓட்டிகளை பதம் பார்த்தன.

சென்னை நகரில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து வீழ்ந்தன. இதனால் அலுவலகப் பணி முடித்து வீடுகளுக்குத் திரும்புவோர் பெரும் அவதிக்குள்ளாக்கினர். மின்சார ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டது.

சென்னை நகரிலிருந்து தென் மாவட்டங்களுக்கும் இதர மாநிலங்களுக்கும் செல்லும் அனைத்து ரயில் போக்குவரத்தும் தாமதமானது. கனமழையால் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் மழைநீர் தேங்கியதால் வான் சேவையும் சிறிது நேரம் பாதிப்புக்குள்ளானது.

கொந்தளித்த கடல்

பலத்த மழை காரணமாக சென்னை கடற்கரையில் மின்னல் வீச்சின் தாக்கம் அதிகமாக இருந்தது. அலைகள் பெருங்கொந்தளிப்புடன் இருந்ததால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்பினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+