நாகர்கோவில் அருகே கிணற்றுக்குள் அழுகிய நிலையில் கிடந்தது மாயமான போலீஸ்காரர் உடலா?
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது போலீஸ்காரரின் உடல்தானா என அவரது மனைவி சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
நாகர்கோவிலை அடுத்த ராஜக்காமங்கலம் அருகே உள்ள பத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். நெல்லை மாவட்டம் களக்காடு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்தார். அவரது மனைவி தங்கராணி. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து தங்கராணி தனது கணவர் மீது போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் ஜெகநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடந்த மாதம் 30ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கடந்த 23ம் தேதி ராஜக்காமங்கலம் அருகே உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் இளைஞர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அது ஜெகநாதன் தான் என உறுதிசெய்ய முடியவில்லை. உடல் மாதிரிகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இருக்கிறது. இன்னும் 45 நாளில் இதன் முடிவு வெளிவரும்.
இந்நிலையில் தங்கராணி நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
குடும்பத் தகராறில் நான் கொடுத்த புகாரின் பேரில் எனது கணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மாயமான தகவல் 15 நாட்களுக்கு பிறகே தெரியும். கிணற்றுக்குள் கிடந்த உடல் எனது கணவராக இருக்கக் கூடாது. எனது கணவர் இறக்க வாய்ப்பு இல்லை. எனது மாமியாரின் நடவடிக்கை எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் கூட மறைத்து வைத்து இருக்கலாம். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். இது தொடர்பாக நான் உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்க இருக்கிறேன். எனது கணவர் திரும்பி வந்தால் அவருடன் சேர்ந்து வாழ்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications