இளைஞர் காங். தேர்தல்: வாசன் ஆதரவாளர்கள் அதிக இடங்களில் வெற்றி-2வது இடம் கார்த்திக்கு!
சென்னை: பெரும் களேபரங்களுக்கு இடையே நடந்த தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் மாநிலம் முழுவதும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்களே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.
இந்தத் தேர்தலில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே. வாசனினி ஆதரவாளர்களுக்கும், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
முதல் கட்டமாக 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதில் வாசன் ஆதரவாளர்களே அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் 22 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர்.
கார்த்தியின் ஆதரவாளர்கள் 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் இளைஞர் காங்கிரஸ் பதவிகளைக் கைப்பற்றி உள்ளனர்.
அதே போல பிரபு ஆதரவாளர்களும், மாணிக்கம் தாகூர், இளங்கோவன், தங்கபாலு ஆதரவாளர்கள் ஒரு சில தொகுதியை கைப்பற்றி உள்ளனர்.
சட்டமன்ற தொகுதி அளவிலும் அதிக தொகுதிகளை வாசன் ஆதரவாளர்களும், அதற்கு அடுத்ததாக கார்த்தி ஆதரவாளர்களும் கைப்பற்றி உள்ளனர். முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் மரணம் அடைந்ததால் திருச்சி தொகுதி ஓட்டு எண்ணிக்கை இன்று தான் நடக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications