பாகிஸ்தானில் பலத்த மழை: வெள்ளத்தில் சிக்கி 422 பேர் பலி
கராச்சி: பாகிஸ்தானில் பெய்து வரும் பலத்த மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி இதுவரை 422 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 3 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 50 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் ஆண்டுதோறும் பருவ மழையின் போது, வெள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக பாகிஸ்தானில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் நாட்டில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வழிவதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 422 பேர் பலியாகி இருப்பதாக தேசிய இயற்கை சீரழிவு தடுப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். மழையினால் ஏற்பட்ட அசம்பாவிதங்களில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள சுமார் 50 லட்சம் பேரில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிந்து மாகாணத்தில் அதிகபட்சமாக மழை வெள்ளத்தில் சிக்கி 239 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீட்பு பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 443 பேர் பலியாகினர். அதேபோல கடந்த 2010ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 1,985 பேர் பலியானாதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யூனிசெப் அமைப்பு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு, மற்ற நாடுகள் உதவிகரம் நீட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. பருவ மழை இன்னும் 3 மாதங்கள் வரை தொடரலாம் என்பதால், இந்த ஆண்டு மழை வெள்ளத்தில் இன்னும் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சப்படுகிறது.
பாகிஸ்தானில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப், சிந்து ஆகிய மாகாணங்களில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதிகளை அளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, ஐ.நா சபை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications