கடத்தப்பட்ட கோழிப்பண்ணை அதிபரின் மகன் நடு ரோட்டில் மீட்பு
திருப்பூர் பல்லடம் அருகே கோழிப்பண்ணை நடத்தி வரும் பாலு என்பவரின் ஒரு வயது மகன் கடத்தப்பட்டான். இருப்பினும் அவனை 2 மணி நேரத்தில் நடு ரோட்டில் வைத்து போலீஸார் மீட்டனர்.
பல்லடம் அருகேயுள்ள கொடுவாய் நாகலிங்கபுரத்தை சேர்ந்தவர் பாலு. கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவரது மகன் சுதன் பிரசாத். ஒரு வயதாகிறது. நேற்று மாலை 5 மணி அளவில் பாலுவை தேடி 4 பேர் காரில் வந்தனர். 2 பேர் மட்டும் வீட்டுக்குள் சென்று பாலுவை விசாரித்தனர். அவர் வீட்டில் இல்லை என்று பாலுவின் மனைவி வெண்ணிலா தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.
அப்போது வீட்டின் முன் பகுதியில் வேலைக்காரப் பெண் சுதன் பிரசாத்தை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில், திடீரென்று அந்த மர்ம மனிதர்கள் குழந்தையை பறித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றனர்.
இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவினாசிபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். குழந்தையை கடத்திய மர்ம மனிதர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு இரவு 7 மணி அளவில் சிறுவன் ஒருவன் அழுது கொண்டு நிற்பதை பார்த்த சிலர் குழந்தையை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை நடத்தியபோது அது சுதன் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து பாலுவும், போலீஸாரும் சென்னிமலை போய் குழந்தையை மீட்டுக் கொண்டு வந்தனர். யார் குழந்தையைக் கடத்தியது, ஏன் விட்டுச் சென்றனர் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications