ரத்த தானம் செய்வது உயிரை காப்பாற்றும் புனித செயல்: முதல்வர் ஜெயலலிதா

இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் தேதியில் தேசிய தன்னார்வ ரத்த தான நாளாக அனுசரிக்கப்படுகிறது. ரத்தம் உயிரின் ஆதாரம் ஆகும். எனவே ரத்ததானம் செய்வது உயிரைக் காப்பாற்றும் ஒரு புனிதமான செயலாகும்.
உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி சென்ற ஆண்டு தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் ஒரு விழுக்காடு என்ற அளவுக்கு ரத்த அலகுகளை தன்னார்வ ரத்தக் கொடையாளர்கள் மூலம் பெற்று இந்தியாவிலேயே, தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழகத்தில் ரத்த தான முகாம்களில் தற்போது அதிநவீன மற்றும் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய 3 நடமாடும் ரத்த சேகரிப்பு வங்கிகளைப் பயன்படுத்தி ரத்தம் சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள ரத்த வங்கிகளுக்கு அனுப்பப்படுகிறது.
3 மாத இடைவேளையில் ரத்த கொடையாளரிடம் இருந்து பெறப்படும் ரத்தம் முற்றிலும் பாதுகாப்பானது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. எனவே ரத்த கொடையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தமிழக அரசு ஆண்டுதோறும் 3 முறை ரத்த தானம் செய்த ஆண்களுக்கும், 2 முறை ரத்த தானம் செய்த பெண்களுக்கும் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவித்து வருகிறது.
தமிழகத்தில் தானாக பெறப்படுகின்ற மொத்தம் ரத்த அலகுகளில் 99 விழுக்காடு ரத்த அலகுகள் தன்னார்வ ரத்த கொடையாளர்களிடம் இருந்தே பெறப்படுகின்றது என்பது பாராட்டுதலுக்குரியது.
மேலும் மகப்பேறு காலங்களில் கிராமப்புறங்களிலும் ரத்த இழப்பால் ஏற்படும் உயிர் இழப்பை தவிர்க்கும் வகையில், தமிழக அரசு தேசிய ஊரக நலக்குழுமம் மூலம் 231 ரத்த சேமிப்பு மையங்களை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய தன்னார்வ ரத்த தான தினமான அக்டோபர் முதல் நாள் அன்று, அனைவரும் ரத்த தானம் செய்து மனித உயிர்களைக் காப்பாற்ற உறுதி ஏற்கவும், நடப்பு ஆண்டில் தமிழகம் தன்னார்வ ரத்த தானத்தில் 100 விழுக்காடு என்ற இலக்கை அடையவும் பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்ய முன் வர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications