ஸ்ரீபெரும்புதூர் தொழிலதிபர் குண்டு வீசியும், வெட்டியும் கொடூரமாக கொலை
ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தொழிலதிபராகவும், ஒன்றிய கவுன்சிலராகவும், திரைப்படத் தயாரிப்பாளருமாகவும் விளங்கி வந்த ஒருவர் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரை வெடிகுண்டு வீசியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் படுகொலை செய்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்தவர், பி.பி.ஜி.குமரன். 32 வயதேயான இவர் கடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
தொழிலதிபராக திகழ்ந்து வந்த இவர் பல்வேறு தொழில்களைப் பார்த்து வந்தார். மேலும் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டிருந்தார். வைகை என்ற படத்தை இவர்த யாரித்திருந்தார். இவருடைய மனைவி பிரசிதா, பிள்ளைப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவியாக இருக்கிறார்.
நேற்று காலை சுமார் 9 மணியளவில் பிள்ளைப்பாக்கத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தன்னுடைய அலுவலகத்திற்கு குமரன் காரில் வந்தார். அவருடன் அவரது ஆலோசகர் மதியழகன் இருந்தார். அவருடைய காருக்கு முன்பாக அவரது நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாளர் பி.பி.ஜி.டி. சங்கர் மற்றொரு காரில் சென்று கொண்டிருந்தார்.
ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் வரும்போது எதிரில் ஒரு காரில் வந்த மர்ம கும்பல் முன்னால் சென்ற காரை வழிமறித்து குண்டுவீசி தாக்கியது. இதில் சங்கர் படுகாயம் அடைந்தார். காரில் குமரன் இல்லை என்பதை அறிந்து கொண்ட மர்ம கும்பல் பின்னால் வந்த காரை நோக்கி சென்றார்கள்.
மர்ம கும்பல் தாக்கியதும், குமரன் இருந்த காரின் டிரைவர் காரை வேகமாக பின்னோக்கி எடுத்து லாவகமாக தப்ப முயன்றார். ஆனால், அந்த காரையும் மர்ம கும்பல் சுற்றி வளைத்து தாக்கியது. முதலில் காரின் இடது பக்கம் உள்ள கதவின் மீது குண்டு வீசினார்கள்.
இதில் காரின் கைப்பிடி மற்றும் காரின் கதவுத்தகடு உடைந்தது. காரில் வலது புறத்தில் குமரன் உட்கார்ந்து இருந்ததை பார்த்த மர்ம மனிதர்கள் காரின் வலதுபுறமாக கண்ணாடியின் மீது மற்றொரு குண்டை வீசினார்கள். அதில் கார் கண்ணாடி உடைந்து சிதறியது.
அதற்குள் சுதாரித்துக்கொண்ட டிரைவர் மீண்டும் காரை பின்னோக்கி எடுத்து திருப்பினார். அப்போது கார் பின்னால் சென்று இடதுபக்கம் உள்ள பள்ளத்தில் சாய்ந்தது. அந்த காரின் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளும் பள்ளத்தில் விழுந்தது.
கார் பள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் கொலைக் கும்பலுக்கு தோதாகப் போய் விட்டது. குமரன் இருந்த காரை சூழ்ந்த அவர்கள் கடப்பாரை, கத்தி, வீச்சரிவாள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு குமரனை சரமாரியாக வெட்டித் தள்ளினர். இதில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் குத்து விழுந்ததால் குமரன் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அவருடன் இருந்த மதியழகனையும் அக்கும்பல் சராரியாக வெட்டியது.
நடுச் சாலையில் பட்டப் பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தால் மக்கள் அலறியடித்து ஓடினர். போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்தனர். ஆனால் கொலைக் கும்பல் அதற்குள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குமரன், மதியழகன், சங்கர் ஆகியோரை போலீஸார் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குமரன் உயிரிழந்தார். மற்ற இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தக் கொலைக்கு தொழில் போட்டி அல்லது தேர்தல் தகராறு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications