ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் விமானம் தாங்கி கப்பலின் கொதிகலனில் கோளாறு
டெல்லி: ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் விமானம் தாங்கி கப்பலின் கொதிகலனில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கப்பல் இந்தியாவிடம் ஒப்படைக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கடற்படையில் ஓய்வு பெற்ற கார்ஸ்கோ என்ற விமானம் தாங்கி கப்பலை இந்தியா, கடந்த 2005ம் ஆண்டு 947 மில்லியன் டாலருக்கு வாங்கியது. அதன்பிறகு கப்பலை சீரமைத்து கடந்த 2008ம் ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கப்பலின் மறுசீரமைப்பு பணிகள் ரஷ்யாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்றது. ஆனால் இந்த பணிகள் தாமதமானதால், கடந்த 2008ம் ஆண்டு கப்பலை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியவில்லை. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி கப்பல், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட வெள்ளோட்டத்தில் கப்பலில் உள்ள கொதிகலனில் கோளாறு இருப்பது தெரியவந்தது. இதனால் கப்பல் சரியான வேகத்தில் இயங்காமல், குறிப்பிட்ட வேகத்தை விட குறைவாக இயங்கியது. எனவே இந்த ஆண்டும் கப்பல், இந்தியாவிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கப்பலின் கொதிகலனில் ஏற்பட்டுள்ள கோளாறை நீக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த 1978ம் ஆண்டு உக்ரைனில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில், கார்ஸ்கோ கப்பல் கட்டும் பணி துவங்கியது. கப்பலின் பணிகள் முடிவடைந்து, கடந்த 1982ம் ஆண்டு ரஷ்ய கடற்படையில் சேர்த்து கொள்ளப்பட்டது. இந்த நிலையில் கடந்த 1987ம் ஆண்டு ரஷ்யா உடைத்த பிறகு, கார்ஸ்கோ பயன்படுத்தப்படாமல் அப்படியே விடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 1995ம் ஆண்டு மீண்டும் பயன்பட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் 1996ம் ஆண்டு கப்பல் விற்பனைக்கு என்று அறிவிக்கப்பட்டது. 45 ஆயிரம் டன்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இக்கப்பலுக்கு இந்திய அரசு, விக்கிரமாதித்யா என்று பெயரிட்டுள்ளது.
இது குறித்து ரஷ்யா துணை பிரதமர் டிமிட்ரி ரோகோசீன் கூறியதாவது,
இந்தியா, ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான ஆலோசனை கூட்டம் இந்த மாதம் நடைபெற உள்ளது. அப்போது கப்பலை ஒப்படைப்பது குறித்து ஆலோசிக்கப்படும். அதற்குள் கப்பலில் தற்போது ஏற்பட்டுள்ள கோளாறு நீக்கப்படும் என்று நம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications