தமிழக - கர்நாடக வாகனப் போக்குவரத்து இன்னும் சீராகவில்லை!
ஈரோடு: காவிரிப் பிரச்சினை காரணமாக தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கிடையிலான வாகனப் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று 3-வது நாளாக மேட்டூரில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி விடுமுறை என்பதால் மாதேஸ்வரன்மலை கோவிலுக்கு செல்ல மேட்டூர் வந்த மக்கள் பஸ் இல்லாததால் ஏமாற்றத்துடன் ஊருக்கு திரும்பிச்சென்றனர்.
இருமாநில எல்லையில் உள்ள பாலாறு சோதனைச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் கர்நாடக மாநில போலீசார் தமிழ்நாடு பதிவெண் கொண்ட அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
இதனால் தமிழகத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பாலாறு சோதனைச்சாவடி அருகே இறக்கி விடப்பட்டனர். பின்னர் அவர்கள், கர்நாடக எல்லை பகுதியில் உள்ள கர்நாடக பஸ்கள் மூலமும், கர்நாடக சுற்றுலா வாகனம் மூலமும் மாதேஸ்வரன் மலைக்கு சென்று வருகின்றனர். நீண்ட நேர இடைவெளிக்கு பிறகே கர்நாடக பஸ்கள் வருவதால், அவர்கள் சோதனைச்சாவடி அருகே நீண்ட நேரம் காத்திருந்து பஸ்களில் ஏற வேண்டியதாகி விட்டது.
தாளவாடி வரை மட்டுமே
ஈரோடு மாவட்டத்தில் இருந்து தாளவாடி வரை மட்டுமே தமிழக பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கிருந்து கர்நாடக எல்லை பகுதி கிராமங்களுக்கு செல்லும் பயணிகள் சரக்கு வாகனங்களிலும், இருசக்கர வாகனங்களிலும் சிரமத்துடன் சென்று வருகிறார்கள். மேலும் மைசூர், பெங்களூர் செல்லும் பயணிகள், ரயிலில் செல்ல தொடங்கியுள்ளனர்.
தனியார் பஸ்கள் மட்டுமே
நேற்று 4-வது நாளாக சத்தியமங்கலத்தில் கர்நாடக மாநிலத்துக்கு பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்லவில்லை. அதேபோல் கர்நாடக மாநில பஸ்களும் சத்தியமங்கலத்துக்கு வரவில்லை. சில தனியார் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அந்த பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
சத்தியமங்கலம், பண்ணாரி, திம்பம், தாளவாடி வழியாக செல்லும் சரக்கு லாரிகளை அதன் டிரைவர்கள் பாதுகாப்பு காரணம் கருதி தமிழக எல்லையிலேயே ஆங்காங்கே நிறுத்திவிட்டார்கள்.












Click it and Unblock the Notifications