கிரானைட் ஊழல்: துரை தயாநிதியின் வீடு, திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் போலீசார் ரெய்ட்!
மதுரை மேலூர் பகுதியில் முறைகேடான கிரானைட் சுரங்கங்களால் அரசுக்கு பல லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனிப்படைகள் அமைத்து மதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிரானைட் முறைகேடு தொடர்பாக பி,ஆர்.பழனிசாமி கைது செய்யப்பட்டார். அவர் மீது 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த முறைகேடு தொடர்பாக மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதியையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
துரை தயாநிதி தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை கடந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து துரை தயாநிதியை தேடும் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந் நிலையில் மதுரை தனிப்படை போலீசார் இன்று காலை சென்னை வந்தனர். தி.நகர் கிருஷ்ணா தெருவில் உள்ள துரை தயாநிதி வீட்டுக்கு சென்றனர். அந்த வீட்டின் ஒரு பகுதியில்தான், துரை தயாநிதியின் சினிமா நிறுவனமான கிளெட் நைன் அலுவலகம் உள்ளது. போலீசார் சென்றபோது அங்கு யாரும் இல்லை. காவலாளி மட்டுமே அங்கு இருந்தார்.
தனிப்படை போலீசார், அந்த வீட்டுக்குள் சென்று சோதனை நடத்தினர். திரைப்பட அலுவலகத்திலும் சுமார் 1 மணி நேரம் சோதனை நடத்தினர்.
சோதனையில் என்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பதை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
மோசடி வழக்கை தள்ளுபடி செய்ய துரை மனு-விசாரணை தள்ளிவைப்பு:
இதற்கிடையே துரை தயாநிதி மீது போடப்பட்ட கிரானைட் மோசடி வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், துரை தயாநிதி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
துரை தயாநிதி தரப்பில் வழக்கறிஞர் வீரகதிரவன், இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் போடப்பட்ட பொய் வழக்கு. இந்த வழக்கில் புகார் கொடுக்க வேண்டியது கனிம வளத்துறை. அதற்கு மாறாக வருவாய் துறை அதிகாரியான விஏஓ ஒருவர் புகார் கொடுத்திருப்பது முரணானது. இந்த வழக்கில் துரை நியமன பங்குதாரராக மட்டுமே இருந்தார். அதுவும் 2008ல் ராஜினாமா செய்துவிட்டார். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.
மேலும் விசாரணை என்ற பெயரில் துரையின் குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் கெடுபிடி செய்கின்றனர். அதை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றார்.
இதையடுத்து வாதிட்ட அரசு வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கூடாது. மேலும் துரை தயாநிதி சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் மொத்தம் 11 பேர் குற்றவாளிகளாக இருக்கின்றனர். இதில் 2 பேரை தவிர மற்றவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர்.
இந்த வழக்கில் மேலும் பலரை விசாரணை செய்ய வேண்டியிருப்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கூடாது. முறையாக சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறோம். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்களையும் அனுமதித்துள்ளோம் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.