பால் அட்டை தாரர்களுக்கு தள்ளுபடி விலையில் நெய் விற்பனை: ஆவின் அறிவிப்பு
சென்னை: ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விலையில் வெண்ணெய், நெய் ஆகியவை விற்பனை செய்ய உள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆவின் பால், நெய், வெண்ணெய் ஆகிய பால் பொருட்களுக்கு மக்கள் இடையே பெரும் வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் பண்டிகை காலத்தில் பால் பொருட்களான நெய், வெண்ணெய் போன்றவை அதிகளவில் விற்பனையாகும்.
இதை கருத்தில் கொண்டு ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு சிறப்பு தள்ளுபடி விலையில் நெய், வெண்ணெய் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இதன்படி வெண்ணெய் அரை கிலோவிற்கு ரூ.3 குறைவாக விற்பனை செய்யப்பட உள்ளது.
அதேபோல ஒரு லிட்டர் நெய்க்கு ரூ.5யும், அரை லிட்டர் நெய் ரூ.3யும் குறைவாக அட்டைதாரர்கள் பெற்று கொள்ளலாம். இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை ஆவினின் 16 வட்டார அலுவலகங்களில் விற்கப்படும் பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும்.
பண்டிகை காலங்களில் ஆவின் பால் பொருட்களை மொத்தமாக வாங்க விரும்புவோர் சென்னையில் உள்ள ஆவின் நந்தனம் அலுவலகத்தில் முன்பதிவு செய்து பெற்று கொள்ளலாம் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications