இந்த 'ஜோல்னா பை' அறிவுஜீவிகளா வந்து ஓட்டு கேட்கப் போகிறார்கள்?: சோனியாவுக்கு கி.வீரமணி கேள்வி!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் மத்தியில் உள்ள மன்மோகன் சிங் அரசு, பல்வேறு மக்கள் நலவிரோத திட்டங்களை தனது கொள்கை முடிவுகளாக அறிவித்து வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலாளிகளை கைலாகு கொடுத்து வரவேற்கும் முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
அன்னிய மூலதன முதலீடு என்பது பன்னாட்டு தொழில் துறை திமிங்கிலங்களின் பச்சாதாபப்படாத சுரண்டல்களுக்கு கதவு திறந்து விடுவது என்று கூட்டணியில் உள்ள கட்சிகளே சுட்டிக் காட்டியும் அது குறித்து மத்திய அரசு கேளாத காதுடன் செயல்படுகிறது.
இப்போது ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதை போல, அடுத்த கட்ட நடவடிக்கையாக இன்ஸ்சூரன்ஸ், காப்பீட்டுத்துறை, ஓய்வூதியத்துறை ஆகியவற்றில் அன்னிய முதலாளிகளை வரவழைக்க ஆயத்தமாவோம் என்று அறிவித்துள்ளது.
இன்ஸ்சூரன்ஸ் துறையில் 26 சதவீதம் வெளிநாட்டு முதலீட்டு பங்கு, இனி 49 சதவீதமாக உயரும் என்று முடிவு செய்து பச்சைக்கொடி காட்டுகிறது. அதைவிடக் கொடுமை என்ன என்றால் ஓய்வூதியத் துறையிலும் வெளிநாட்டு மூலதன நிறுவனங்களுக்கு கதவு திறக்கப்பட்டுள்ளது ஆகும்.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு முற்றிலும் மாறானது இது. உள்நாட்டிலேயே தேவையான முதலீட்டை திரட்டாலாம் என்பதே அதன் யோசனை. சில புள்ளி விவரங்கள் மத்திய ஆட்சியின் முடிவை நியாயப்படுத்துவதாக இல்லை.
எடுத்துக்காட்டாக, கடந்த 10 ஆண்டுகளில் ரூ.6,300 கோடி வெளிநாட்டு அன்னிய முதலீடாக வந்துள்ளது; ஆனால் எல்.ஐ.சி. மட்டும் ரூ.7,000 கோடி ஈவுத்தொகை வழங்கியுள்ளது. 11வது ஐந்தாண்டு திட்டத்திற்கு ரூ.7 லட்சத்து 415 கோடி வழங்கியுள்ளது. பொதுத்துறை நிறுவனத்தை முற்றாக தனியார் மயமாக்குவதற்குரிய முதற்கட்ட முயற்சியே இது.
1.83 கோடி பாலிசிதாரர்களை கொண்ட எல்.ஐ.சி, 99 சதவீதம் பாலிசிதாரர்களுக்கு முறையாக பணத்தை வழங்கி உள்ளது. ஆனால் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், தங்கள் பாலிசிதாரர்களில் 60 முதல் 80 சதவீதம் மட்டுமே பணத்தை வழங்கி வருகின்றன. இதன்மூலம் பொதுத்துறை நிறுவனம், தனியார் துறையைவிட சிறப்பாகவும், திறமையாகவும் செயல்படுகிறது என்பதை தான் காட்டுகிறது. நமது அரசியல் சட்டத்தில் உள்ள சோஷலிசம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா?
ஓய்வூதியத்திலும் இந்த ஒட்டகத்தை நுழைய விடுவது மிகப் பெரிய மக்கள் விரோதம் ஆகும். ஓய்வூதியதாரர்களின் எதிர்காலம் இருண்டுவிடக் கூடிய ஆபத்து அறவே இல்லை என்று மத்திய அரசு உத்தரவாதம் கொடுக்க முடியுமா?
தற்போதுள்ள அமைப்பில் ஓய்வூதியத் திட்டம் 1995இல் ஒரு ஊழியர் இறந்தால், அது ஆயுள் முழுமைக்கானது என்ற காரணத்தால், அவரது குடும்பத்திற்கு ஓய்வூதியம் அல்லது 100 மாதங்களுக்கான மொத்த ஓய்வூதியம் கொடுக்கப்படும் ஏற்பாடு நடைமுறையில் உள்ளது.
இதேபோல தனியார் நிறுவனங்கள் செயல்படுத்துமா? இடையில் மூடப்பட்டால் (பிஎன்ரான்பி போன்ற நிறுவனங்கள் முன்மாதிரி) இன்சால்வென்ட் ஆனால் யாரைப் போய் கேட்க முடியும்? அரசு உரிமையாளர் என்றால் நிலை அப்படி அல்ல.
இன்னொரு திடுக்கிடும் புள்ளி விவரம் இந்த முடிவை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. தற்போது இந்திய தொழிலாளர் வைப்பு நிதி செயல்படாத கணக்குகள் உள்ள தொகை ரூ.22,636 கோடி. (சந்தா செலுத்தாமை, மூடப்பட்ட நிறுவனங்கள் போன்றவைகளால்).
அதுபோல கேட்பாரில்லாத நிதி ரூ.4 ஆயிரம் கோடி. இந்நிலையில் எதற்கு அன்னிய முதலீடுகள் மேலும் உயர்த்தப்பட வேண்டும்? அன்னிய துணி பகிஷ்காரம் செய்தது மறந்து போய்விட்டதா? வெள்ளையர்கனின் சுரண்டல் ஒழிக என்று கூறியவர்கள் ஆளும் காங்கிரசார் தான்! அன்னிய துணிகள் பகிஷ்காரம் என்று கூறி பதவிக்கு வந்தவர்கள்!
'இந்தியனாக இரு; இந்திய பொருட்களையே வாங்கு' என்றெல்லாம் நெருக்கடி காலத்தில் தத்துவ முழக்கமிட்டவர்கள், இப்படி தாறுமாறாக பன்னாட்டு முதலாளிகள் சுரண்டலுக்கு பகிரங்க அனுமதியும் அழைப்பும் தரலாமா?
இவை எல்லாவற்றைவிட, இன்னும் 2 ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் ஆளும் கூட்டணி - (இடையில் கவிழ வாய்ப்பில்லை என்பதை ஒப்புக் கொண்டே) வாக்கு வங்கி குறித்தும், ஏழை, எளிய, பாமர, விவசாய, வியாபாரிகள் கண்ணோட்டம் ஆதரவு பற்றியும் சிந்திக்க வேண்டாமா?
மதவெறி ஆட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர இப்படிப்பட்ட முடிவுகள் மூலம், தங்களை அறியாமலேயே வழிவகுக்கலாமா? மான்டேக்சிங் அலுவாலியாக்களும், ரங்கராஜ அய்யங்கார்களும், கெல்கர்களும் இதர ஜோல்னாப்பை அறிவு ஜீவிகளுமா வந்து வாக்கு கேட்கப் போகிறார்கள்? சோனியா காந்தியும், மன்மோகன்சிங்கும் வர வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அரசியல் சாதுர்யம் கூட இல்லையே என்று அந்த அறிக்கையில் வீரமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications