ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஏ.சி சண்முகத்திற்கு சிறப்பு கவுரவ டாக்டர் பட்டம்!
சென்னை: சென்னை டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக வேந்தரும், பெங்களூர் ராஜராஜேஸ்வரி கல்வி நிறுவன தலைவருமான ஏ.சி.சண்முகத்துக்கு சிறப்பு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
நோபல் பரிசு பெற்றவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புகழ்பெற்ற டாக்டர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வருவது பன்னாட்டு மருத்துவ அறிவியல் கழகம். இந்த கழகத்தின் 2 நாள் மாநாடு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ள அஜ்மன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் பிரபல கல்ப் மருத்துவ பல்கலை கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா நாளை மாலை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு பட்டமளிப்பு விழாவில் சென்னை டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக வேந்தரும், பெங்களூர் ராஜராஜேஸ்வரி கல்வி நிறுவன தலைவருமான ஏ.சி.சண்முகத்துக்கு சிறப்பு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
அவருக்கு அஜ்மன் இளவரசர் ஷேக் ஹமீத் பின் ரஷீத் அல் நுவாமி பட்டத்தை வழங்கி பாராட்ட உள்ளார். பெங்களூரில் உள்ள ராஜராஜேஸ்வரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், பல் மருத்துவமனையிலும் கடந்த 10 ஆண்டுகளாக கட்டணம் இல்லாமல் அறுவை சிகிச்சை மற்றும் இலவச படுக்கை வசதியுடன் சிகிச்சை அளித்து வரும் பணிக்காக ஏ.சி.சண்முகத்திற்கு சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications