பிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர்களின் ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்க்க நிதி: ஜெயலலிதா
சென்னை: பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் நலக் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்க்க நிதி உதவி அளிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நல கல்லூரி விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்கள் ஆங்கிலப் பேச்சாற்றலை மேம்படுத்தும் வகையில், ஒருவருக்கு 2,800 ரூபாய் வீதம் 160 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி/தொழில் நுட்ப/தொழிற் பயிற்சி விடுதிகளில் தங்கி பயிலும் 6,550 மாணவ, மாணவியருக்கு 1 கோடியே 83 லட்சம் ரூபாய் செலவில் ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட/ சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கான பரிசுத் தொகை உயர்த்தப்பட்டது போல, சிறுபான்மையின மாணவ/மாணவியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மாவட்ட அளவில் தற்பொழுது 10ம் வகுப்பில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் நிலையில் அதிக மதிப்பெண் பெறும் சிறுபான்மையினர் மாணவ/மாணவியருக்கு முறையே 1,500 ரூபாய், 1,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் என வழங்கப்பட்டு வரும் பரிசுத் தொகையினை முறையே 3,000 ரூபாய், 2,000 ரூபாய், 1,000 ரூபாய் என உயர்த்தியும்,
12ம் வகுப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் அதிக மதிப்பெண் பெறும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு முறையே 3,000 ரூபாய், 2,000 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் என வழங்கப்பட்டு வரும் பரிசுத் தொகையினை முறையே 6,000 ரூபாய், 4,000 ரூபாய், 2,000 ரூபாய் என உயர்த்தியும் வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஆதரவற்ற முஸ்லீம் சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்கள் சுயமாக சிறு தொழில்கள் செய்திட, இலவச தையல் இயந்திரங்கள், மாவரைக்கும் இயந்திரங்கள், மருத்துவ உதவித் தொகை, விதவை மற்றும் முதியோர் உதவித் தொகை வழங்கிட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் திரட்டப்படும் நன்கொடைக்கு ஈடாக அரசால் 1:1 என்ற விகிதத்தில் வழங்கப்படும் இணை மானியம், 1:2 விகிதத்தில் இருமடங்காக உயர்த்தியும், ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் மானியத் தொகையான 10 லட்சம் ரூபாயை 20 லட்சம் ரூபாய் என உயர்த்தியும் வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உயர்வு 1.4.2012 முதல் அமல்படுத்தப்படும். இதற்காக 3 கோடியே 20 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மேலும், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ-மாணவியர் பயன் பெறும் வகையில் 2012-13 ஆம் நிதியாண்டில் கட்டுமானப் பணி முடியும் தருவாயில் உள்ள 5 விடுதிகளையும் சேர்த்து 103 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் 8,365 மாணவ, மாணவியர்களுக்கு 4,204 எண்ணிக்கையிலான இரும்பிலான இரண்டடுக்கு கட்டில்களையும், குளிர்பிரதேச பகுதிகளில் இயங்கும் 2 பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் 100 மாணவர்களுக்கு 50 எண்ணிக்கையில் மரத்திலான இரண்டடுக்கு கட்டில்களையும் வழங்கிடவும், அதற்காக 3 கோடியே 71 லட்சத்து 57 ஆயிரத்து 620 ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications