பொய்ப் புகார் கொடுத்தவர், ஜெயா டிவி மீது அவதூறு வழக்கு.. தொடர்ந்தார் மு.க.ஸ்டாலின்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது சென்னையை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது நிலத்தை அபகரித்ததாக புகார் கூறியிருந்தார். இதுதொடர்பாக போலீஸ் டிஜிபியிடம் திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெள்ளிக்கிழமை மனு தந்தார்.
அதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக ஆறுமுகம் என்பவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிய வருகிறோம். விளம்பரம் பெற வேண்டும் என்பதற்காக, எங்கள் இயக்க தலைவர் மீது மாசு கற்பிக்கும் தீய நோக்குடன் அவதூறான வார்த்தைகளுடன் முற்றிலும் பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கொண்டதாகும்.
ஆறுமுகம் என்பவர் செய்துள்ள தற்போதைய முயற்சி தண்டனை சட்டத்தின்படி தண்டனைக்குரியதாகும். அவரது தீய நோக்கத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.பொய்யான புகாரால் நான் உட்பட கட்சிக்காரர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எனவே,பொய் புகார் அளித்து, எங்களது தலைவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காவும், பொய்யான தகவல் மூலம் அவர்களது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காகவும் தண்டனை சட்டத்தின்படி ஆறுமுகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார்.
அந்த மனுமீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்திற்கு நேரில் வந்த மு.க.ஸ்டாலின் பொய் புகார் அளித்த ஆறுமுகம் மீதும் அந்த செய்தியை ஒளிபரப்பிய ஜெயா டிவி மீதும் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு மீது வரும் 15 தேதி விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications