வாத்ரா மீது புகார்களை அடுக்கும் கெஜரிவால்.. கேஸ் போட வேண்டியது தானே?

அன்னா குழுவில் இருந்த கெஜரிவாலுக்கு அரசியல் ஆசை வந்துவிட, அதை அன்னா ஹசாரே தடுத்த குழு இரண்டானது.
இதையடுத்து India against corruption என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய அரவிந்த் கெஜரிவால், அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சி மீது மட்டுமே புகார்களை அடுக்கி வருகிறார்.
அதே நேரத்தில் மாநிலக் கட்சிகளான திமுக, அதிமுக, தேசியவாத காங்கிரஸ், தேசியக் கட்சிகளான பாஜக ஆகியவற்றுக்கும் ஊழலுக்கும் சம்பந்தமே இல்லாதது மாதிரியும், அவர் பேசி வருகிறார். இதனால் இவர் காங்கிரசுக்கு எதிரான அரசியல் மட்டுமே செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் எதற்கெடுத்தாலும் கேஸ் போடும் ஆட்கள் இவரது கட்சியில் உள்ளனர். குறிப்பாக சாந்த் பூஷண், பிரசாந்த் பூஷண் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் இவரது கட்சியில் உள்ளனர்.
வாத்ரா மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை மட்டும் கூறி வரும் வத்ரா ஏன் அவர் மீது வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக ஒரு பொது நல வழக்குக் கூட போடவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.
இதற்கு ஒரு காரணமும் சொல்கிறார்கள். அதாவது வழக்கு என்று போட்டுவிட்டால் அது குறித்து டிவி, பத்திரிக்கைகளில் கெஜரிவாலால் விவாதிக்க முடியாது. அது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விஷயமாகிவிடும் என்பதால், அது குறித்துப் பேசுவது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும்.
இதனால், வத்ரா விஷயத்தை வைத்துக் கொண்டு வட மாநில டிவிக்களில் அரசியல் செய்ய முடியாது.
இதனால் தான் அவர் கோர்ட்டுக்கு போக மறுப்பதாகத் தெரிகிறது. உண்மையிலேயே இவருக்கு ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், தனக்குக் கிடைக்கும் அரசியல் லாபத்தை மட்டும் மனதில் வைத்து செயல்படாமல் நீதிமன்றத்தை கெஜரிவால் நாடியிருப்பார்.
ஆனால், அதைச் செய்யாமல் வெறுமனே டிவிக்களில் மட்டுமே ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, குறிப்பாக காங்கிரஸ் கட்சியை மட்டும் குறி வைத்து இவர் பேசி வருவது, இவர் மீதான நம்பகத்தன்மையை குறைக்க ஆரம்பித்துள்ளது.
அரசியல் லாபம் என்ற ஒரே குறிக்கோள் தான் என்றால், இவருக்கும் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.
எனவே, இவரும் அரசியல் குட்டையில் கலந்துவிட்ட ஒரு மட்டையாகவே பார்க்கப்படுவார். மேலும் இவர் ஒரு பாஜகவின் முகமூடியாகவே பார்க்கப்படுவார்.
கேஜரிவாலுக்கு நிதி எங்கிருந்து வருகிறது?:
அதே போல தனது அரசியல் இயக்கத்துக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்பதை கேஜரிவால் விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி திரும்பத் திருப்பக் கோரி வரும் நிலையில், அது குறித்து வாய் திறக்காமல் உள்ளார் கெஜரிவால் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கூறுகையில், வாத்ரா மீது கேஜரிவால் கூறியுள்ள புகாருக்கு ஆதாரம் இருப்பதாகத் தோன்றவில்லை. அவர் வைத்துள்ள ஆதாரம் உண்மையானதுதான் என்று எப்படி நம்புவது?.
வாத்ரா மீதான புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டிவியில் தோன்றி குற்றம் சுமத்துவதை விட்டுவிட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கட்டும். அதை ஏன் அவர் செய்ய மறுக்கிறார்?.
அப்படியானால் ஆதாரமே இல்லாமல் பொய் புகார் கூறுகிறார் என்று தானே அர்த்தம்.
அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டுள்ள கேஜரிவால், சுய விளம்பரத்துக்காக இதுபோன்ற செயலில் இறங்கி உள்ளார். ஊடகங்களை பயன்படுத்தி ஓட்டு வேட்டையாடுவதே அவரது நோக்கமாகத் தெரிகிறது.
ஊழலுக்கு எதிராக போராடுவதாகக் கூறுபவர்கள் முதலில் தாம் நேர்மையாக இருக்கிறோமா என்பதைப் பார்க்க வேண்டும். கேஜரிவாலின் பிரசாரத்துக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்ற கேள்வியை எழுப்பி வருகிறோம். ஆனால், அவர் பதிலே சொல்ல மறுக்கிறார். இதுகுறித்து அவர் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா என்றார்.
காங்கிரஸ் ரொம்ப ஒழுக்கமான கட்சியோ இல்லையோ, இந்தக் கேள்வியில் நியாயம் இருக்கிறது.
ஏன் கோர்ட்டுக்குப் போக மாட்டீங்கிறீங்க மிஸ்டர் ஜெகரிவால்?












Click it and Unblock the Notifications