சென்னையில் பயங்கரம்...12 வயது சிறுவன் தூக்குப் போட்டுத் தற்கொலை
சென்னை: சென்னை ஆவடியில் 12 வயது சிறுவன் ஒருவன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
ஆவடி சேக்காடு மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் மனைவி தமிழரசி. கூலித் தொழிலாளர்கள். இவர்களுக்கு 12 வயதில் சூர்யா என்ர மகன் இருந்தான். மேலும் 9 வயதில் கார்த்தி, 7 வயதில் அப்பு ஆகிய குழந்தைகளும் உள்ளனர். சொந்த ஊர் கும்பகோணம் ஆகும்.
சூர்யா கும்பகோணத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி 7ம் வகுப்பு படித்து வந்தான். ஆவடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கார்த்தி 4ம் வகுப்பும், அப்பு 2ம் வகுப்பும் படித்து வருகின்றனர். சூர்யா சரியாக படிக்காமல் இருந்ததாக தெரிகிறது. பள்ளிக்கும் சரிவரப் போவதில்லையாம்.
இதையடுத்து மகனை அங்கிருந்து அழைத்து வந்து விட்டார் கிருஷ்ணமூர்த்தி. இந்த நிலையில் திங்கள்கிழமையன்று தனது மற்ற இரண்டு மகன்களும் பள்ளிக்குப் போகாமல் சூர்யாவோடு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமி சூர்யாவைக் கண்டித்துள்ளார். பின்னர் மற்ற இரு மகன்களையும் பள்ளிக்குக் கூட்டிப் போய் விட்டார். இந்த நிலையில் மன வேதனை அடைந்த சூர்யா வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டான். தனது தாயாரின் சேலையில் அவன் தூக்குப் போட்டுள்ளான்.
போலீஸாருக்குத் தகவல் கிடைத்து விரைந்து வந்து உடலை மீட்டனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. 12 வயது சிறுவன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications