ஸ்பெக்ட்ரம் ஊழல்: பார்லி. கூட்டுக் குழு கூட்டத்தை புறக்கணித்தன அனைத்து எதிர்க்கட்சிகளும்!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் இருந்து இடதுசாரி கட்சிகள் இன்று வெளிநடப்பு செய்தன. பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி இன்றைய கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டது.
பாஜக புறக்கணிப்பு
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக அனைத்து கட்சியினரும் இடம்பெற்றிருக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழு பிரதமர் மன்மோகன்சிங்கையும் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா, இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மன்மோகன்சிங்கையும் சிதம்பரத்தையும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பவில்லையென்றால் கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று பாஜக அறிவித்திருந்தது. அதன்படி இன்றைய கூட்டத்தில் பாஜகவினர் எவரும் கலந்து கொள்ளவில்லை.
இடதுசாரிகள் வெளிநடப்பு
இன்றைய கூட்டம் பி. சாக்கோ தலைமையில் கூடிய போது, மன்மோகன்சிங்கையும் சிதம்பரத்தையும் விசாரணைக்கு அழைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குருதாஸ் குப்தா வெளிநடப்பு செய்தார். குருதாஸ் குப்தாவின் கோரிக்கையை ஆதரிப்பதாக மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளும் அறிவித்திருக்கின்றன.
மத்திய அரசுக்கு சிக்கல்
எதிர்க்கட்சிகளும் ஆதரவு தரும் கட்சிகளும் ஒரு சேர மன்மோகன்சிங்கையும் சிதம்பரத்தையும் விசாரிக்க வலியுறுத்தி வருவதால் மத்திய அரசுக்கு கடுமையான நெருக்கடி உருவாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications