லண்டனில் புற்று நோயாளிக்கு இந்திய பெண்ணின் ஸ்டெம் செல் மூலம் சிகிச்சை!
மும்பை: லண்டன் மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு நாக்பூரைச் சேர்ந்த ஒருவரது ஸ்டெம் செல்கள் மாற்றப்பட்டிருக்கிறது. வெளிநாடு ஒன்றுக்கு இந்தியரின் ஸ்டெம் செல் கொண்டு செல்லப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான "Datri"யின் நிர்வாகி ரகு ராஜகோபால் கூறியுள்ளதாவது:
புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு ஸ்டெம் செல்களை வழங்குவோர் பற்றி சர்வதேச அளவில் தரவுகளை சேகரித்து வைத்திருக்கிறோம். சில மாதங்களுக்கு முன்பு எமது அமைப்பை இங்கிலாந்தைச் சேர்ந்த "Anthony Nolan" என்ற அமைப்பு தொடர்பு கொண்டு ஸ்டெம் செல் வழங்குவோர் பற்றிய தகவலைக் கேட்டிருந்தது.
அதனடிப்படையில் நாக்பூரைச் சேர்ந்த 50 வயது பெண்ணின் ஸ்டெம் செல் எடுக்கப்பட்டது. இதற்காக அந்த பெண் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு அவருக்கு சில சோதனைகள் நடத்தப்பட்டது. பின்னர் அவரது ஸ்டெம் செல்லை நானே லண்டனுக்கு எடுத்துச் சென்று அங்கு தென்னாசியாவைச் சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 40 வயது நபருக்கு அந்த செல்கள் செப்டம்பர் முதல் வாரத்தில் மாற்றப்பட்டன. அந்த மருத்துவமனையோடு நாங்கள் தொடர்ந்தும் தொடர்பில் இருக்கிறோம் என்றார் அவர்.
புற்றுநோயின்போது ஒருவரின் உடலில் உள்ள நல்ல செல்கள் அழிகின்றன. ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் இன்னொருவரின் செல்களை பாதிக்கப்பட்டவரின் உடலில் ஏற்றி, அவருக்கு புதிதாக செல்களை உருவாக்க முடியும்.












Click it and Unblock the Notifications