பெல்காமில் கர்நாடக சட்டசபை கட்டிட திறப்பு விழா-தடுக்கப்பட்ட மகாராஷ்டிர நிருபர்கள்
பெங்களூர்: பெல்காமில் கர்நாடக சட்டப்பேரவை கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்ய தொலைக்காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
பெல்காமில் கர்நாடக பேரவை கட்டிடம்
கர்நாடக மாநிலத்தின் பெல்காம் பகுதியை தங்களது மாநிலத்தின் ஒருபகுதி என்று மகராஷ்டிரா இன்னமும் கூறி வருகிறது. அப்பகுதியில் மராட்டிய மொழி பேசுவோரே அதிகம் வசிப்பதாகவும் அம்மாநிலம் உரிமை கோருகிறது. ஆனால் 1967-ம் ஆண்டு அமைக்கப்பட்ட மகாஜன் கமிஷனின் அறிக்கையின் அடிப்படையில் எங்களது மாந்லத்தின் ஒரு பகுதிதான் பெல்காம் என்று கர்நாடகம் வாதிட்டு வருகிறது.
நீண்டகாலமாக நீடித்து வரும் இந்த சர்ச்சையின் இடையே கர்நாடக முதல்வராக இருந்த குமாரசாமி, பெல்காமில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஒன்றையும் நடத்தினார். அப்போது பெங்களூரில் உள்ள கர்நாடக சட்ட சபையான் விதான் செளதா போல பெல்காமில் ஸ்வர்ண செளதா அமைக்கப்படும் என்றும் அறிவித்து அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் எதியூரப்பா ஆட்சிக் காலத்தில் வேறொரு இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த இடத்தில்தான் ரூ400 கோடியில் ஸ்வர்ன செளதா கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. இக்கட்டிடத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டும் இருக்கிறது.
மகராஷ்டிரா எதிர்ப்பு
ஆனால் கர்நாடகத்தின் இந்த நடவடிக்கைக்கு மகராஷ்டிரா மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சில மராட்டிய அமைப்புகள் பெல்காம் பகுதியில் முழு அடைப்புப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருக்கிறது. தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த மகாராஷ்டிரா அமைச்சர் சகன் பூஜ்பால் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்வது என்பது மராத்தியர்களின் உணர்வை உதாசீனப்படுத்துவதாகும் என்று கூறியுள்ளனர். மேலும் சில மகராஷ்டிர அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளன. இதனால் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு
இதனிடையே மகாராஷ்டிராவைச் சேர்ந்த சில பத்திரிகையாளர்கள் இந்த நிகழ்ச்சியை நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதை கர்நாடக போலீசார் தடுத்ததாக புகார் எழுந்துள்ளது. பாதுகாப்பு கருதியே பத்திரிகையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டதாக கர்நாடக போலீசார் விளக்கம் அளித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications