ஜோசியர் சொல்றார்.. எதியூரப்பா செய்றார்..

சரியாக 31ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், மிகச் சரியாக தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பரத்வாஜிடம் தந்தார். அந்த நேரம், அவரது ஆஸ்தான ஜோதிடர் குறித்துத் தந்த நேரமாகும்.
இந் நிலையில் விரைவில் கட்சியை விட்டு விலகப் போகிறேன் என்று கூறிக் கொண்டே இருந்த எதியூரப்பா, முதலில் ஒரு தேதியை சொன்னார், பின்னர் அதை ஒத்தி வைத்தார். இப்போது டிசம்பர் மாதம் பாஜகவை விட்டு விலகி, புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இதுவும் கூட ஜோதிடர்களின் ஆலோசனைப்படி தான் என்கிறார்கள். கட்சியை விட்டு விலக ஒரு நாளையும், நேரத்தையும் குறித்துத் தந்துள்ள ஜோதிடர்கள், கட்சியை ஆரம்பிக்கவும் தேதி குறித்துத் தந்துள்ளார்களாம். அதன்படியே புதிய கட்சியைத் தொடங்கவுள்ளார் எதியூரப்பா.
முன்னதாக தனது முடிவு குறித்து நிருபர்களிடம் பேசிய எதியூரப்பா, நான் இனியும் பாஜகவில் தொடர்ந்து நீடிக்கும் பேச்சுக்கே இடமில்லை. பாஜகவுக்கு நான் தேவை இல்லை என்று அந்த கட்சியின் தலைவர்கள் நினைக்கிறார்கள். அதனால் நான் புதிய கட்சியை தொடங்குவது 100க்கு 99 சதவீதம் உறுதி. (1 சதவீதத்தை எதியூரப்பா விட்டு வைத்திருப்பதற்குக் காரணம், தனது மிரட்டலுக்கு பயந்து கட்சித் தலைவர்கள் தனக்கு மாநில கட்சித் தலைவர் பதவியை தந்துவிடுவார்கள் என்ற நப்பாசை)
இதுதொடர்பாக எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறேன். வரும் டிசம்பர் மாதம் புதிய கட்சி தொடங்குகிறேன். இதற்கு முன் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களிடம் விவாதித்து கருத்துக்களை கேட்டு அறிய முடிவு செய்துள்ளேன். விரைவில் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ளேன் என்றார்.
எதியூரப்பாவின் கட்சியின் பெயர் ‘கர்நாடக ஜனதா கட்சி' என்கிறார்கள். கட்சிக்கு ‘சைக்கிள்' சின்னம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications