தண்ணீர் தராத கர்நாடகாவிற்கு மின்சாரம் கிடையாது: வைகோ

இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
காவிரி நடுவர்மன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது. தமிழக அரசு கோரிக்கை விடுத்த அளவுக்குத் தண்ணீரை வழங்கிட காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவு பிறப்பிக்காமல், ஆணையத்தின் தலைவரான இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், ஒப்புக்காக, விநாடிக்கு 9,000 கன அடிதண்ணீர் கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்று அறிவித்தார்.
‘காவிரி நீர் ஆணையம் அறிவித்தவாறு தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த தீர்ப்பையும் காலில் போட்டுமிதித்துவிட்டு, கர்நாடக அரசு காவிரித் தண்ணீரை தமிழகத்திற்கு வரவிடாமல்,தடுத்துவிட்டது. எஸ்.எம்.கிருஷ்ணாவும், மத்திய காங்கிரஸ் அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கேயும், கர்நாடகத்தைச் சார்ந்த பா.ஜ.க., எம்.பி.களும் கூட்டாகச் சேர்ந்து பிரதமரைச் சந்தித்து, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரக்கூடாது என்று நிர்ப்பந்தித்தனர்.
தமிழ்நாட்டுக்குக் காவிரித் தண்ணீர் வராவிடில், காவிரி படுகை நஞ்சை நிலங்கள் தரிசு நிலங்களாக ஆகும். இலட்சக்கணக்கான விவசாயிகள் வாழ்க்கை எல்லையற்ற துயரத்தில் முடியும். இதற்கு மத்தியில் கர்நாடகத்தில் உள்ள கன்னட வெறியர்கள், அராஜகமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே, கர்நாடகத்திற்கு தமிழ்நாட்டின் நெய்வேலி நிறுவனத்திலிருந்து ஒரு யூனிட் மின்சாரம்கூட அனுப்பக்கூடாது என்று வலியுறுத்தியும், காவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் ஓரவஞ்சமாகச் செயல்பட்டுத் துரோகம் இழைக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும், அக்டோபர் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம், மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் எனது தலைமையில் நடைபெறும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications