புதுச்சேரி திமுக பொறுப்பாளராக எம்.ஏ.எஸ். சுப்பிரமணியம் நியமனம்: ஜானகிராமன் விலகல்
சென்னை: புதுச்சேரி மாநில திமுக பொறுப்பாளராக எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுவை மாநில திமுக அமைப்பாளராக இருந்த ஜானகிராமன் சில நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவர் பதவியில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், அவரது செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால், அவரை கட்சித் தலைமை விலகச் சொன்னதாகவும் கூறுகிறார்கள்.
புதுச்சேரி மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநில அமைப்பாளரை உடனே தேர்வு செய்யும் வகையில், புதுவை மாநில நிர்வாகிகள் இன்று திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
ஜானகிராமன், சி.தா. வேதநாயகம், மா. சுப்பிரமணியம், தைரியநாதன், சிவா, ராஜாராமன், கென்னடி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் திமுக தலைவர் கருணாநிதி 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனை நடந்தது.
இதையடுத்து திமுக வெளியிட்ட அறிக்கையில், இன்று காலை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்திலுள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற புதுச்சேரி மாநிலக் கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது என்றும், உடல்நிலை காரணமாக பதவி விலகியுள்ள புதுச்சேரி மாநிலக் கழக அமைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமனுக்கு பதிலாக டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியம் புதுச்சேரி மாநிலக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலக் கழக நிர்வாகிகள் அவரோடு இணைந்து பணியாற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கருணாநிதியிடம், காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளதை பற்றி கேட்டதற்கு, எப்பொழுதும் தொழிலாளர்களுடைய போராட்டங்களை ஆதரிப்பவர்கள் நாங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications