நீதிமன்றத்துக்கு வருகிறவர்கள் சுத்தமான கையோடு இருக்கனும்: நித்தியானந்தாவுக்கு ஹைகோர்ட் குட்டு

சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவில், என்மீது கர்நாடகாவில் குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர்த்தி ராவும், நித்தியதர்மானந்தா என்ற லெனின் கருப்பனும் அந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக உள்ளனர். ஆனால் ஆர்த்தி ராவ் தவறான உள்நோக்கத்தோடு என்னைப் பற்றி தவறான மற்றும் அவதூறான கருத்துகளை பத்திரிகை மற்றும் டி.வி.களுக்கு அளித்து வருகிறார். ஆர்த்தி ராவ், அவரது தந்தை சேதுமாதவன், லெனின் கருப்பன் ஆகியோர் என்னையும், எனது பக்தர்களைப் பற்றி வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, கருத்துகள், பேட்டிகள், அறிக்கைகள் அளிக்கக்கூடாது என்று உத்தரவிடக் கோரியிருந்தார்.
சுத்தமான கையோடு இருக்கனும்...
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, தம்மைப் பற்றி மற்றவர்களை பேசக்கூடாது என்று தீர்வு கேட்டு நீதிமன்றத்துக்கு வருகிறவர்கள் சுத்தமான கையோடு இருக்க வேண்டும். தம்மைப் பற்றி மற்றவர்கள் குறை கூறுவதை தடுப்பதற்கும், அவர்களை வாயடைப்பதற்கும் நீதிமன்றத்தை ஒரு கருவியாக பயன்படுத்தக்கூடாது. தீர்வு கேட்டு நீதிமன்றத்துக்கு வருகிறவர் நல்லெண்ணத்தில் வரவேண்டும். 2010-ம் ஆண்டில் நித்தியானந்தா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும், அவர் சம்பந்தப்பட்ட விவகாரம் அக்குவேறு ஆணிவேறாக இந்தியா முழுவதும் அலசி ஆராயப்பட்டுவிட்டது. அவரது விவகாரத்தை மறைப்பதற்கு ஒன்றுமில்லை. நித்தியானந்தாவின் கேள்விகளுக்குத்தான் பதிலளித்தேன் என்றும், அவரை அவதூறு செய்யும் நோக்கம் எனக்கில்லை என்றும் ஆர்த்தி ராவ் கூறியிருக்கிறார். எனவே, நித்தியானந்தாவின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications