பிஆர்பி, துரை தயாநிதியின் கிரானைட்-அன்னிய செலாவணி மோசடிகள்: அமலாக்கப் பிரிவு விசாரணை!

அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த திமுக, அதிமுக என எல்லா காலத்திலுமே இந்த சட்டவிரோதமாக கிரானைட்கள் செயல்பட்டே வந்தன. அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் என கட்சிகளின் அனைத்து மட்டத்தினரையும் கையில் போட்டுக் கொண்டு இந்த கிரானைட் குவாரிகள் இயங்கி வந்தன.
அரசியல்வாதிகள் சொன்னதைக் கேட்டும், பின்னர் தாங்களாகவும் மனம் உவந்தும் இந்த கிரானைட் திருட்டுக் கும்பல்களுக்கு அதிகாரிகளும் முழு அளவில் உதவினர். கனிமவளத்துறை என்ற ஒரு துறையில் மட்டும் இதற்காக பல நூறு கோடியளவுக்கு லஞ்சம் தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களுக்கு தரப்பட்ட தொகையின் அளவை யாராலும் கணக்கிடவே முடியாது. தேர்தல் நேரத்தில் இந்த குவாரிகளின் அதிபர்கள் எல்லா கட்சிகளுக்கும் அள்ளித் தந்துள்ளனர்.
இவர்களிடம் கையேந்தியது போக நாமே நேரடியாக ஏன் கிரானைட்டை வெட்டி எடுக்கக் கூடாது என்று களத்தில் இறங்கியவர் தான் துரை தயாநிதி. இவரும் வேறு சிலரும் இணைந்து ஒலிம்பஸ் கிரானைட்டை ஆரம்பித்து மலைகளை உடைத்து சட்டவிரோதமாக கிரானைட்டை எடுத்து விற்றுள்ளனர்.
இந்த விவகாரத்தை மிக விரிவாக விசாரித்தால், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பின்னோக்கி போக வேண்டி இருக்கும். 1990களின் ஆரம்பத்திலேயே இந்த கிரானைட் மோசடி ஆரம்பித்துவிட்டது.
இந்த 20 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள் என உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்துள்ளனர்.
இதன் மதிப்பு நிச்சயம் பல லட்சம் கோடிகளைத் தாண்டும். இதன் உண்மையான அளவை கணக்கிடுவதே கஷ்டம் எனும்போது, இந்தப் பணத்தை கிரானைட் கொள்ளையர்களிடம் இருந்து மீட்பது என்பது இயலவே இயலாத காரியம்.
சில சொத்துக்களை முடக்கினாலும் கூட பல லட்சம் கோடியை நாடு இழந்தது, இழந்தது தான்.
இப்போது 94 கிரானைட் குவாரிகள் சீல் வைக்கப்பட்டு, பி.ஆர்.பழனிச்சாமி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஒலிம்பஸ் கிரானைட் இயக்குநரான மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்ட கிரானைட் அதிபர்கள் 40 பேர் தலைமறைவாக உள்ளனர்.
இந் நிலையில், இந்த விவகாரத்தில் பல நாடுகளுக்கும் முதலீடுகள் போயுள்ளதாலும், அன்னிய செலவாணி மோசடி, ஹவாலா என அனைத்து வகையான கருப்புப் பண நடமாட்டமும் நடந்துள்ளதாலும் இதை சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு ஆகியவை விசாரிப்பதே சரியாக இருக்கும்.
ஆனால், இதை இன்னும் சிபிஐ வசம் தமிழக அரசு ஒப்படைக்கவில்லை. அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் நடந்த அன்னிய செலாவணி மோசடிகள் குறித்து விசாரிக்குமாறு அமலாக்கப் பிரிவை தமிழக அரசு நாடவுள்ளது.
அமலாக்கப் பிரிவு தனது விசாரணையை தீவிரமாக்கினால் அது திமுகவுக்கு நிச்சயம் வலியைக் கொடுக்கும் என்கிறார்கள். காரணம், தமிழக போலீசாரோடு சேர்ந்து துரை தயாநிதியை அமலாக்கப் பிரிவும் விசாரிக்க வேண்டியது வரலாம். இதனால் திமுக-காங்கிரஸ் உரசல் மேலும் அதிகமாகலாம்.
இதை மனதில் வைத்தே இந்த விவகாரத்தை அமலாக்கப் பிரிவிடம் முதல்வர் ஜெயலலிதா ஒப்படைக்கவுள்ளார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications