கூடங்குளம் விவகாரம்: அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை கூட்டம்- தேதி தள்ளிவைப்பு
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம் குறித்து இன்று நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம், வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் 422 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பல வகையிலான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 8ம் தேதி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடல் வழியாக படகுகளில் சென்று கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர்.
கடந்த 8ம் தேதி காலையில் துவங்கிய போராட்டம் பிற்பகல் 4 மணி வரை மொத்தம் 7 மணி நேரம் நீடித்தது. இந்த போராட்டத்தின் போது அணுஉலையை மூட வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தினர். போராட்டத்தின் முடிவில் போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பேட்டி அளித்தார்.
அப்போது அவர், அடுத்தக்கட்ட போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று இடிந்தகரையில் நடைபெறும். இதில் அனைத்து சமுதாய தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்றார்.
இந்த நிலையில் இன்று நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம், வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே இடிந்தகரை லூர்து மாதா ஆலய வளாகத்தில் வரும் 14ம் தேதி காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ள நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த அனைத்து சமுதாய தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான புஷ்பராயன் தெரிவித்துள்ளார்.
கூடங்குளத்தில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு:
இந்த நிலையில் கூடங்குளத்தில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் போராட்ட குழுவினரால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள 7 கி.மீ. சுற்றளவில் கடந்த 9ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது அங்கு தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால் 144 தடை உத்தரவை இன்று காலை 6 மணி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி மாலை 6 மணி வரை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே அணுமின்நிலையத்தை சுற்றியுள்ள 7 கி.மீ. பகுதிக்குள் போராட்டக்காரர்கள் கூடி நின்று பேச கூடாது. மேலும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கூடங்குளம் பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications