சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காரசார விவாதம்-கமிஷனரை கண்டித்து செய்தியாளர்கள் வெளிநடப்பு
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், கமிஷனர் ஜார்ஜை கண்டித்து, செய்தியாளர்கள் வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஐ.சி.எப். பகுதியில் மாணவன் ஒருவன் கடத்தப்பட்டு ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே நக்சல்கள் உள்ள பகுதியில் இருந்து மீட்கப்பட்டான். இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று மாலை நடைபெற இருந்தது. இதில் கமிஷனர் ஜார்ஜ், செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து செய்தியாளர்களுக்கு தகவல் கிடைத்தது.
சென்னையின் புதிய கமிஷனராக ஜார்ஜ் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் சந்திப்பு இது. இதனால் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்பட்டது. சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்பு, மாலை 5 மணி அளவில் செய்தியாளர்கள் கூடினர்.
அப்போது கமிஷனர் ஜார்ஜ், எனக்கு முன்னால் உள்ள மைக்கை எடுத்து விடுங்கள். எதையும் வைக்க வேண்டாம், புகைப்படமும் எடுக்க வேண்டாம் என்று கூறினார். இதை ஏற்று வீடியோ கேமராமேன்களும், ஸ்டில் கேமராமேன்களும் வெளியேற்றினர்.
இந்த நிலையில் இது குறித்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜூம், செய்தியாளர்களும் கருத்து பரிமாற்றம் செய்தனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஜெயா டிவி நிருபர் தலைமையில் அனைத்து செய்தியாளர்களும் வெளிநடப்பு செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனைத்து செய்தியாளர்களும் வெளிநடப்பு செய்வது இதுவரை முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications